Skip to main content

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் மிஸ்டர்.கிரிக்கெட்... அதிகம் கொண்டாடப்படாத ஜாம்பவான்

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

டி20, டி10 போட்டிகள் கலக்கிவரும் காலங்களிலும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் புஜாராவின் அசத்தலான ஆட்டம் அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்தது. ஆனால் டி20 வீரர்களுக்கு கிடைக்கும் பிரபலமும், புகழும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டான புஜாரா போன்ற வீரர்களுக்கு கிடைக்கிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி தான். உலக கிரிக்கெட்டில் பேட்டிங் சாதனைகளை எடுத்துப் பார்த்தால் சச்சின் என்ற பெயர் ஆதிக்கம் செலுத்தும். அதுபோல இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் சச்சின் என்றால் வாசிம் ஜாபர் தான்.  

 

wasim

 

தனது 15-வது வயதில் பள்ளி அணியில் விளையாடி வந்தார் ஜாபர். இவர் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அசாருதீன் பேட்டிங் ஸ்டைல் போன்று விளையாடுவார். 18-வது வயதில் ரஞ்சி தொடரில் செளராஷ்டிரா அணிக்கு எதிராக மும்பை அணிக்காக 314 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் ஜாபர், குல்கர்னி ஆகியோர் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பாக 459 ரன்கள்  எடுத்து அசத்தினர். 2000-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 2006-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதமடித்து அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றினார். 2006-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் இரட்டை சதமடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 31 போட்டிகளில் 1944 ரன்கள், சராசரி 34.11. அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார். 

 

ரஞ்சி தொடரில் 8 வருடங்கள் மும்பை அணிக்கும், 2 வருடங்கள் விதர்பா அணிக்கும் இறுதிப்போட்டியில் விளையாடி, தான் விளையாடிய 10 இறுதிப்போட்டியிலும் ரஞ்சி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார். 


பல சாதனைகளை உள்ளூர் போட்டிகளில் படைத்துள்ளார். இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த போதிலும் உள்ளூர் போட்டிகளில் அசத்தியுள்ளார். ஜாபர் “உள்ளூர் போட்டிகளின் ஜாம்பவான்” என்று கூறுவதற்கு அவரது முதல்தர போட்டிகளே போதுமானது.  

 

wasim

 

ஐ.பி.எல். தொடரில் முதல் சீசனில் பெங்களூர் அணிக்கு விளையாடினார். ரஞ்சி போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். ரஞ்சி போட்டிகளில் மட்டும் இதுவரை 148 போட்டிகளில்  11741 ரன்கள், சராசரி  58.12, அதிகபட்ச ரன்கள் 314, 40 சதங்கள், 46 அரைசதங்கள். 

 

ஒரு தொடக்க வீரராக மெதுவாக விளையாடும் திறன் கொண்ட ஜாபர் 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் இளம் வீரர்களான ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 2010-2012 வரை உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார் ஜாபர். அந்த நேரங்களில் கம்பீர் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடி வந்தார். தவான் மற்றும் ஷர்மா ஆகியோரின் முதல் 30 டெஸ்ட் போட்டிகளின் சராசரி ஜாபரின் சராசரியை விட சிறப்பாக இல்லை. ஆனால் 30 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே வைத்து டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஜாபரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தது வருத்தப்படக்கூடிய ஒன்று.

 

இதுவரை 251 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 19079 ரன்கள், 51.42 சராசரி, 57 சதங்கள், 88 அரைசதங்கள் மற்றும் அதிகபட்சமாக 314 ரன்கள் எடுத்துள்ளார். 35 வயதில் ஜாபர் இங்கிலாந்தில் ஐன்ஸ்டெல் சி.சி. அணிக்கு  எல்.டி.சி.சி. லீக்கில் விளையாடினார். மேலும் சர்வதேச கிரிக்கெட் விளையாடாத போதிலும்  ஜாபர் இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். 2014-ஆம் ஆண்டு முழங்கால் காயம் காரணமாக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது. இந்தியா திரும்பிய பிறகு ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியில் இருந்து மாறி விதர்பா அணிக்கு விளையாட தொடங்கினார். 

 

ஒரு வீரர் டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு திறமைகளை கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவர் இந்த காலகட்டத்தில் கிரிக்கெட்டில் பெரிய இடங்களை அடைய முடியாது என்று வருங்கால தலைமுறைக்கு தன் அனுபவத்தின் மூலம் கருத்து கூறியுள்ளார் ஜாபர். லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிறிய சாதனை படைத்த ஒரு வீரரை நாம் கொண்டாடிய அளவிற்கு 41 வயதில் விளையாடிவரும் ஜாபர் போன்ற அரிதிலும் அரிதான உள்நாட்டு ஜாம்பவான்களை கொண்டாட தவறிவிட்டோம் என்பதே நிதர்சனம். இன்று அவரின் பிறந்தநாள். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.