Skip to main content

இந்தியா ஏன் ஒருநாள் தொடரை இழந்தது? - ஐந்து காரணங்கள்

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றிருந்தாலும், இந்திய அணியால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்ல முடியவில்லை. உலக தரவரிசையில் நம்பர் 1 - நம்பர் 2 இடங்களில் இருக்கும் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான தொடரில், இங்கிலாந்து அணியின் கைகளே ஓங்கியிருந்தன. வெற்றியைத் தீர்மானிக்கும் லீட்ஸ் போட்டியில் அது அப்பட்டமாக தெரிந்தது.
 

england

 

 

 

இதை மாற்றியிருக்கலாம், இவரை சேர்த்திருக்கலாம் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்படும் சூழலில், இந்தியா தொடரை இழந்ததற்காக நாம் சொல்லும் ஐந்து காரணங்கள் இதோ..
 

பும்ரா, புவனேஷ்வர் இல்லாதது
 

Virat

 

 

 

டி20 தொடரின் தொடக்கத்திலேயே காயம் காரணமாக இந்தியா திரும்பினார் ஜஸ்பிரித் பும்ரா. புவனேஷ்வர் குமாரும் முதுகுவலி காரணமாக ஓய்வில் இருந்துவிட அனுபவமில்லாத சித்தார்த் கவுல் மற்றும் ஸ்ரதுல் தாக்கூரால் சுமையை சுமக்க முடியவில்லை. டெஸ்ட் தொடருக்காக பந்துவீச்சாளர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உமேஷுக்கு ஓய்வளிக்கப்பட்டது. மூன்றாவது போட்டியில் புவனேஷ்வர் களமிறங்கியும் ஆட்டத்தில் சூடு பறக்கவில்லை. 
 

குல்தீப் யாதவ்வை கணித்துவிட்டார்கள்
 

டி20 தொடரின்போது அசத்தலாக பந்துவீசிய குல்தீப் யாதவ், ஒருநாள் தொடரின் தொடக்கத்திலும் இங்கிலாந்து வீரர்களை திணறடித்தார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ட்ரம்ப் கார்ட் என்றெல்லாம் பேசப்பட்ட குல்தீப் யாதவ்வை, அடுத்தடுத்த போட்டிகளில் பீல்டு ஒர்க், ஹோம் ஒர்க் செய்த இங்கிலாந்து வீரர்கள் கணித்துவிட்டார்கள். கடைசி போட்டியில் விக்கெட் எதுவும் கொடுக்காமல் 55 ரன்கள் கொடுத்த குல்தீப்பே அதை உணர்ந்திருப்பார். 
 

 

 

சொதப்பிய இந்திய பேட்ஸ்மென்கள்
 

இந்திய அணியின் பலமே அதன் பேட்டிங் லைன்அப் தான். ஆனால், இங்கிலாந்து தொடரில் அது மெய்யாகவில்லை. அதிக நம்பிக்கை வைத்திருந்த கே.எல்.ராகுல் ஏமாற்ற, தொடக்க இணையான ரோகித்-தவான் தாக்குப்பிடிக்கவில்லை. லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியில் முதல் நான்கு விக்கெட்டுகளுக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இந்திய அணி. அதைத் தொடர்ந்து தோனி நிதானம் கடைபிடிக்க மைதானமே அலறித்துடித்தது. கடைசி போட்டியிலும் அதே நிலையே நீடித்தது.
 

அசத்திய ஜோ ரூட்டின் பெர்ஃபாமென்ஸ்
 

இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி அழுத்தமான பேட்டிங் லைன்அப் உடன் களமிறங்கியது. குறிப்பாக ஜோ ரூட்டின் ஆட்டம் என்பது அதிக கவனத்தைப் பெற்றது. குல்தீப் யாதவ்வை அவர் கையாண்ட விதம், கடைசி இரண்டு போட்டிகளில் அவரது நிதானமான விளையாட்டும், சதங்களும் இங்கிலாந்து அணிக்கு பெரிய பலத்தைக் கொடுத்தது. மோர்கன் - ரூட் இணையும் அதிக நேரம் களத்தில் நீடித்து இந்திய அணி பவுலர்களை சோதித்தது குறிப்பிடத்தக்கது. 
 

இங்கிலாந்தின் ஸ்பின் - ஃபாஸ்ட் பவுலிங் காம்போ
 

Virat

 

 

 

முதல் போட்டியில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து இங்கிலாந்து பவுலர்கள் அடுத்த இரண்டு போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடினர். டேவிட் வில்லி, மார்க் உட் மற்றும் அடில் ரஷித் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மென்களை சுலபமாக வெளியேற்றினர். குறிப்பாக ரஷித் வீசிய பந்துகளை விராட் கோலியே பெருமிதமாகப் பேசினார். 
 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.