Skip to main content

விஸ்வரூபம் எடுக்க தயாராகி வரும் டெல்லி கேபிடல்ஸ்...

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

பல கேப்டன்கள், ஒவ்வொரு சீசனிலும் மாற்றப்பட்ட பல வீரர்கள், புதுப்புது பயிற்சியாளர்கள் என பல விஷயங்களை மாற்றிவிட்டது டெல்லி. ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை கூட ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த முறை மற்றுமொரு முயற்சியாக அணியின் பெயரையும் மாற்றியுள்ளது. மேலும் இந்திய அணியை கட்டமைத்த கங்குலியை அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது.  

 

delhi capitals

 

ஐ.பி.எல். தொடரில் தற்போது விளையாடும் அணிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி மட்டுமே இதுவரை ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு செல்லவில்லை. 11 ஆண்டுகள் கனவை நினைவாக்கும் வகையில் புத்துணர்ச்சியுடன் இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் என்ற பெயரில் இளம் வீரர்கள் கொண்டு விஸ்வரூபம் எடுக்க தயாராகி வருகிறது. ஐ.பி.எல். தொடரில் 11 சீசனில் 3 முறை மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 
 

சேவாக், கம்பீர், டி வில்லியர்ஸ், வார்னர், பீட்டர்சன் என பல ஜாம்பவான்கள் முதல் சில தொடர்களில் டெல்லி அணியில் விளையாடினார்கள். 7 கேப்டன்கள், 5 பயிற்சியாளர்கள் என டெல்லி அணி ஒவ்வொரு ஆண்டும் பல மாற்றங்கள் கொண்டு வந்த நிலையிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான புள்ளி விவரங்கள் கொண்ட அணியாக டெல்லி உள்ளது.   

 

delhi capitals

 

கடந்த ஆண்டு சிறப்பான வீரர்கள் இருந்தும் சரியான டீம் காம்பினேஷசன் அமையாமல் லீக் சுற்றில் கடைசி இடத்தை பிடித்தது. முக்கிய வீரர்களான மேக்ஸ்வெல், கம்பீர், காலின் மன்றோ, ஜேசன் ராய், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் ஃபார்ம் இல்லாமல் இருந்தது, ரபாடா காயம் காரணமாக தொடரில் வெளியேறியது போன்றவை தொடரின் முதல் பாதியில் பெரிய பலவீனமாக அமைந்தது. 
 

இந்த முறை காலின் மன்றோ, பிரித்வி ஷா, ஷிகர் தவான் என வலுவான தொடக்க ஆட்டக்காரர்கள் எதிரணிக்கு சவாலாக அமையும். ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், காலின் இங்க்ராம் ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் பலமாக உள்ளனர். டாப் 5 பேட்ஸ்மேன்கள் வலுவாக உள்ளனர்.  கிறிஸ் மோரிஸ், அக்சர் படேல் ஆகியோர் லோயர் ஆர்டர் பேட்டிங்கில் ஹிட்டர்களாக சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். மன்ஜோத் கல்ரா, ஜலஜ் சக்சேனா, அங்குஷ் பெயின்ஸ் ஆகியோர் பேக்அப் வீரர்களாக பேட்டிங்கில் பங்களிப்பார்கள்.  
 

அமித் மிஸ்ரா, சந்தீப் லமிச்சான், ராகுல் டிவாட்டியா, அக்சர் படேல் ஆகியோர் ஸ்பின் பவுலிங்கில் அணிக்கு பலமாக இருப்பார்கள். சந்தீப் லமிச்சான் இந்த முறை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

delhi capital

 

ரபாடா, டிரென்ட் போல்ட், கிறிஸ் மோரிஸ், இஷாந்த் சர்மா, ஹர்ஷால் படேல், அவேஷ் கான் ஆகியோர் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுக்கு வலு சேர்க்கின்றனர். கிறிஸ் மோரிஸ், அக்சர் படேல், ஷேர்பான் ரூதர்போர்டு, பண்டாரு ஐயப்பா, ஜலஜ் சக்சேனா ஆகியோர் லோயர் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அணிக்கு உதவுவார்கள். 
 

உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களான ரபாடா, டிரென்ட் போல்ட், கிறிஸ் மோரிஸ் போன்ற ஃபாஸ்ட் பவுலர்கள் தொடர் முழுவதும் விளையாடுவார்களா என்பது சந்தேகம். உள்ளூர் ஃபாஸ்ட் பவுலர்களில் டி20 ஸ்பெஷலிஸ்ட் இல்லாதது பவுலிங் யூனிட்டுக்கு பெரிய பலவீனமாக அமையும். 
 

கவுதம் கம்பீர், ஜேசன் ராய், மேக்ஸ்வெல், குர்கீரத் மான், முஹம்மது ஷமி, டேன் கிறிஸ்டியன், சயான் கோஷ், லயிம் பிளங்கெட், ஜூனியர் டலா, நமன் ஓஜா ஆகிய வீரர்களை இந்த ஆண்டு விடுவித்து விட்டு ஷிகர் தவான், காலின் இங்க்ராம், அக்சர் படேல், ஹனுமா விகாரி, ஷேர்பான் ரூதர்போர்டு, கீமோ பால் ஆகியோரை எடுத்துள்ளது. 
 

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங், துணை பயிற்சியாளராக முஹம்மது கைஃப், ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக ஜெம்ஸ் ஹோப்ஸ், ஆலோசகராக கங்குலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 24 வீரர்களில் 16 இந்திய வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். 

 

பலம்:

வலுவான டாப் ஆர்டர் பேட்டிங்.

சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூன்ட்.
 

பலவீனம்:

வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர்கள் தொடர் முழுவதும் விளையாடுவது சந்தேகம்.

கிறிஸ் மோரிஸ் தவிர பலமான ஆல்ரவுண்டர்கள் இல்லை.

சிறந்த லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லை.
 

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் விவரம்:


ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், காலின் மன்றோ, ஹனுமா விகாரி, காலின் இங்க்ராம், கிறிஸ் மோரிஸ், ரபாடா, டிரென்ட் போல்ட், அக்சர் படேல், அமித் மிஸ்ரா, ராகுல் டிவாட்டியா, சந்தீப் லமிச்சான், ஹர்ஷால் படேல், அவேஷ் கான், இஷாந்த் சர்மா, மன்ஜோத் கல்ரா, ஜலஜ் சக்சேனா, பண்டாரு ஐயப்பா, ஷேர்பான் ரூதர்போர்டு, கீமோ பால், நது சிங், அங்குஷ் பெயின்ஸ். 

 

 

 

Next Story

ரோஹித் சொன்னதைச் செய்த பண்ட்; கலக்கிய டெல்லி அணி!

Published on 25/04/2024 | Edited on 26/04/2024

 

gt vs dc pant delivered the rohit wish delhi capitals victory

ஐபிஎல் 2024இன் 40 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஜேக் ஃப்ரேசரின் தொடக்க அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 ரன்களில் வெளியேறினார். புதுமையான முயற்சியாக அக்சர் 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அடுத்து பிரித்வி பவர்பிளேயிலே 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த சாய் ஹோப்பும், டெல்லி அணியின் ஹோப்பை போக்கும் வகையில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 44-3 என்று மோசமான நிலையில் இருந்த அணியை அக்சருடன் இணைந்து மீட்டார் கேப்டன் பண்ட். பரீட்சார்த்த முயற்சியைப் பயன்படுத்திக் கொண்ட அக்சர் சிறப்பாக விளையாடினார்.

பண்ட்டுக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்த அக்சர் அதிரடியாக 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிக்சர்களில் கலக்கிய பண்ட் 8 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். முத்தாய்ப்பாக மொஹித் சர்மாவின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் உட்பட 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி சேர்த்து அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக வழக்கம் போல கலக்கிய ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்தது. சந்தீப் வாரியர் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த, மற்ற பவுலர்கள் சொதப்பினர். குறிப்பாக மொஹித் சர்மா 4 ஓவர்களில் 73 ரன்களைக் கொடுத்து ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் கொடுத்தவர் என்கிற மோசமான சாதனையைப் படைத்தார்.

gt vs dc pant delivered the rohit wish delhi capitals victory

பின்னர் 225 ரன்கள் என்கிற கடின இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு கேப்டன் கில் 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் எப்போதும் போல பொறுப்பாக ஆடினார். 2ஆவது விக்கெட்டுகு சஹாவும், சாயும் சேர்ந்து 82 ரன்கள் எடுக்க சஹா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் நன்றாக ஆடி அரை சதம் கடந்த சுதர்சனும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒமர்சாய் 1, ஷாருக்கான் 8, டெவாட்டியா 4 என விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது.

பின்னர் வந்த மில்லர் தன் அதிரடியை ஆரம்பித்தார். சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைப்பார் மில்லர் என்று ரசிகர்கள் எதிரபார்த்த வேளையில், 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரஷித் 23, கிஷோர் 13 முயன்றும் குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 220 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. பண்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பண்ட்டின் இந்த அதிரடி பேட்டிங் ரோஹித்தின் கூற்றை நிரூபித்துள்ளது. இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், இங்கிலாந்தின் பேஸ்பால் ஆட்டத்தால் தான் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார் என்று கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் ரோஹித், ரிஷப் பண்ட்டின் அதிரடியைப் பார்த்ததில்லையா என்று கூறியிருந்தார். அந்தக் கூற்றை நிரூபிக்கும் வகையில் பண்ட் நேற்றைய போட்டியில் ஆடியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போட்டியில் பண்ட் முன்னிலை வகிக்கிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூருவுக்கு மட்டும் மற்ற அணிகளின் வெற்றியைப் பொறுத்து பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே மீதமிருக்கும் போட்டிகளை வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால், ஐ.பி.எல் தொடர் மேலும் சுவாரசியமடைந்துள்ளது.

Next Story

ஐ.பி.எல்- இல் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
 Rohit Sharma set a new record in IPL

ஐபிஎல்-இல் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் 2024 இன் 20ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலி பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை அதிரடி துவக்கம் தந்தது. முதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது. அதிரடியாக ஆடினாலும் இருவரும் அரை சதத்தை தவற விட்டு ரோஹித் 49 ரன்களிலும், இஷான் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து வந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா டக் அவுட் ஆனார், திலக் வர்மாவும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ஹர்திக், டிம் டேவிட் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹர்திக் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரொமாரியோ ஷெப்பெர்டுடன், டிம் டேவிட் இணைந்து அதிரடி காட்டினர். முக்கியமாக 10 பந்துகளை மட்டுமே சந்தித்த ரொமாரியோ 39 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் இறுதி ஓவரான நோர்க்யா ஓவரில் 4 சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெடுகள் இழப்பிற்கு  234 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இது 4ஆவது அதிகபட்ச ஸ்கோராகும்.

பின்னர் ஆடிய டெல்லி அணிக்கு வார்னர் 10, விரைவில் ஆட்டமிழந்தாலும், பிரித்வி ஷாவும், பொரேலும் இணைந்து அதிரடியாக ஆடினர்.  2ஆவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த இந்த இணையை பும்ரா பிரித்தார். பிரித்வி ஷா 66 ரன்களில் பும்ரா பந்தில் போல்டானார். பொரேல் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஸ்டப்ஸ் மட்டும் தனியாளாகப் போராடி 25 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். ஆனாலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் டெல்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலிலும் 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இந்த ஆட்டத்தில் 8 ஆவது விக்கெட்டாக ரிச்சர்ட்ஸன் ரோஹித் சர்மாவின் கேட்சால் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா 100 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார். இது ஐபிஎல்-இல் 4ஆவது அதிகபட்ச கேட்சாகும். மும்பை அணி சார்பாக 2ஆவது அதிகபட்ச கேட்சாகும். பொல்லார்டு 103 கேட்சுகளுடன் மும்பை அணி சார்பாக அதிக கேட்சுகள் பிடித்துள்ளார். ஐபிஎல் இல்  110 கேட்சுகளுடன் கோலி முதலிடத்திலும், ரெய்னா 109 கேட்சுகளுடன் இரண்டாவது இடத்திலும், பொல்லார்டு மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.