Skip to main content

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் இணையும் மூன்று வீரர்கள் யார்? - பிசிசிஐ அறிவிப்பு!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

PRITHVI SHAW SKY

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்ற இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்திற்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கிடையே இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

 

இதனையடுத்து இங்கிலாந்தில் உள்ள இந்திய அணி நிர்வாகம் மாற்று வீரர்களைக் கேட்டதாகவும், இதனையடுத்து தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாடி வரும் ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெறவுள்ளார்கள் எனத் தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில் ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும், இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், மாற்று வீரராக இந்திய அணியுடன் சென்ற அபிமன்யு ஈஸ்வரன், தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

சூர்யகுமார் யாதவ் மற்றும்  ப்ரித்வி ஷா இருவரும் உடனடியாக இங்கிலாந்து செல்வார்களா அல்லது இலங்கை அணியுடனான இருபது ஓவர் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து செல்வார்களா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.