Skip to main content

மருத்துவர் கடவுளாக இருந்த காலம் போய் இப்ப...? - ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Dr. C Rajendiran  Interview 

 

மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்தின் தற்போதைய நிலை குறித்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்குகிறார்

 

மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் மிகுந்த மரியாதையோடு பார்த்த காலம் ஒன்று இருந்தது. மருத்துவரை கடவுளாகவே பார்த்தார்கள். தெய்வம் நேரில் வர முடியாததால், தெய்வத்தின் பிரதிநிதி மருத்துவர்தான் என நம்பினர். மருத்துவர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே மக்கள் செய்தார்கள். விஞ்ஞானம் வளர வளர, போட்டி மனப்பான்மை அதிகரித்தது. மருத்துவத்தில் நிபுணத்துவம் என்கிற விஷயம் உள்ளே வந்த பிறகு, பரிசோதனைக்கூடங்கள் அதிகமாக அதிகமாக, தொடர்ந்து பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன. 

 

இப்போது பலர் மருத்துவரை ஒரு எதிரியாகவே பார்க்கின்றனர். நம்பகத்தன்மை என்பது இன்று பெரிய அளவில் குறைந்துள்ளது என்பதை நான் வருத்தத்துடன் சொல்கிறேன். ஒரு மருத்துவரிடம் செல்லும்போது, என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது, என்னென்ன செய்தால் இது குணமாகும் என்று விளக்கமாக சொல்வார். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நபர்களின் சதவீதம் இன்று குறைந்துள்ளது. ஒரு மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகு, அவர் மீது நம்பிக்கை இல்லாமல் இன்னும் சில மருத்துவர்களிடம் விசாரிக்கின்றனர். 

 

இது ஒரு பெரிய மாற்றம். இதன் மூலம் சில நன்மைகளும் இருக்கின்றன, நன்மை இல்லாத சூழ்நிலையும் இருக்கிறது. நோயாளி தான் சொல்வதை நம்பப் போவதில்லை என்று தெரிந்தால், மருத்துவரின் ஆர்வமும் குறையும். அவருடைய கமிட்மெண்ட் என்பது குறையும். மருத்துவர்களின் மீது நோயாளிகளுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி இதில் பெரும்பங்கு வகிக்கிறது. அனைத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும், அனைத்து விதமான பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். 

 

அனைத்தையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மருத்துவர் தள்ளப்படுகிறார். இது ஒரு வகையில் நன்மைதான். ஆனால் அலைபேசி மூலம் அனைத்து வகையான நோய்கள் குறித்தும் நோயாளிகள் அவர்களாகவே இன்டர்நெட்டில் தேடுவது இப்போது அதிகரித்துள்ளது. அவர்களே தேடி, அவர்களே கண்டுபிடித்து, அவர்களே பயப்படுகிறார்கள். உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும், ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியான பிரிவுகள் மருத்துவத்துறையில் வந்துவிட்டன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக இப்போது டாக்டர்கள் இருக்கின்றனர். குடும்ப டாக்டர் என்கிற கான்செப்ட் இப்போது குறைந்து வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.
 

 

 

Next Story

பன்றிக் காய்ச்சல் நுரையீரலை பாதிக்குமா? - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
 Dr Rajendran | Swine flu 

மழைக் காலங்களில் பரவக்கூடிய பல்வேறு வகையான காய்ச்சலைப் பற்றி நமக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேந்திரன் விளக்குகிறார்.

இன்றைய காலத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு தவிர மற்றுமொரு கவனிக்கப்பட வேண்டிய காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் ஆகும். ஸ்வைன் ப்ளூ ஹெச்1 என் 1 இன்புளுயன்சா வைரஸ், இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவக் கூடியது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவரை கடித்த கொசு மற்றவரை கடிக்கும்போது அதனால் பரவக்கூடியது டெங்கு காய்ச்சல். 

ஆனால் பன்றிக் காய்ச்சல் என்பது பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வருகிற மூச்சுக்காற்று, இருமல், சளி ஆகியவற்றாலும், கை, கால் ஆகியவற்றைக் கொண்டு எங்கெல்லாம் தொடுகிறோமோ அதன் மூலம் பரவக்கூடிய தன்மையைக் கொண்டது. 

பன்றிக் காய்ச்சல் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் தீவிரமான உடல் சூட்டோடு காய்ச்சல், உடல் வலி, வரட்டு இருமல், கடுமையான தலைவலி, தொண்டை வலி ஏற்படும். மருத்துவர்கள் தொண்டை வலி என்றதும் தொண்டையை பரிசோதித்துப் பார்ப்பார்கள். ஆனால் அங்கே வலியால் வீங்கியோ அல்லது சிவந்து போயோ இருக்காது இப்படியாக எந்த அறிகுறிகளுமே இல்லாமல் கடுமையான தொண்டை வலி ஏற்பட்டால் அது பன்றிக் காய்ச்சல் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 

நோயின் தீவிரத்தன்மையை அறியாமல் சாதாரண காய்ச்சல்தான் என்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போட்டுக் கொண்டு சாதாரணமாக இருந்து விடக்கூடாது. தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டால் சுவாசப் பாதையிலிருந்து நுரையீரலை நோக்கி காய்ச்சல் நகரக்கூடும் இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும்.  

பன்றிக் காய்ச்சல் என்றதும் நாங்கள் பன்றிக்கறி எதுவும் சாப்பிடவில்லையே, பன்றியிடம் அருகில் எதுவும் போகவில்லையே என்று நினைப்பார்கள். அது காய்ச்சலை வேறுபடுத்த வைக்கப்பட்ட பெயராகும். காய்ச்சலின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ள பரிசோதனை செய்து உறுதிசெய்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையையோ, மருத்துவரையோ அணுகி முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 

Next Story

வைரஸ் காய்ச்சலால் இறப்பு ஏற்படுமா? - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

 Dr Rajendran | Virus Fever | Dengue Fever |

 

இந்த மழைக்காலத்தில் அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது வெறும் காய்ச்சல்தானா? அல்லது அதைத் தாண்டி ஏதேனும் பிரச்சனை உருவாகுமா என்ற நமது கேள்விக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் டாக்டர் ராஜேந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

 

மழைக்கால நோய்கள் என்பது பல வகைகளில் உண்டு. அவற்றில் முக்கியமானது வைரஸ் காய்ச்சல். இது ஒரு நுண் கிருமிகளால் உண்டாவது. தற்போதைய மழைக்கால வைரஸ் காய்ச்சல்களில் எவற்றிற்கெல்லாம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்புளுயன்சா வைரஸ், ஹெச் 1 என் 1, ஸ்வைன் ப்ளூ, போன்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிற காய்ச்சல்கள் ஆபத்து நிறைந்தவை. வைரஸ் தொற்றால் ஏற்படுகிற காய்ச்சல் வெறும் காய்ச்சல் மட்டுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நிறைய வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தே இல்லை. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உண்டாகும். 

 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாகி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் மூன்று நாட்களுக்கு கடுமையான காய்ச்சலாக இருக்கும். அதோடு உடல் வலி, இடுப்பில் கடுமையான வலி, கண்ணைச்சுற்றி வலி போன்ற வலிகளால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுவார்கள். அடுத்தடுத்த நாட்களில் குணமாகிவிடுவது போன்று தோன்றியிருக்கும் உடனே மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தி விடுவார்கள். அது மேற்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும். 

 

குழந்தைகளுக்கு பெரியவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தது, நாங்களே மாத்திரை கொடுத்தோம். மூன்று நாளில் சரியாகி விட்டது என்று பள்ளிக்கு அனுப்பினோம், ஆனால் பள்ளியில் மயங்கி விழுந்து விட்டாள் என்று மருத்துவரை அணுகுவார்கள். தானாகவே மாத்திரை எடுத்துக் கொள்வது மிகவும் சிக்கலில் முடியும். 

 

காய்ச்சலை சரி பண்ண வெறும் பாராசிட்டமால் என்ற எண்ணத்தை முதலில் மனதிலிருந்து நீக்குங்கள். அது ஒரு வகை வலி நிவாரணி மருந்து மட்டுமே. முறையாக மருத்துவரை அணுகி, என்ன வகையான வைரஸ் தொற்று என்பதை உறுதி செய்ய இரத்த பரிசோதனை செய்து, அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். நீர் ஆகாரம் உள் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே மழைக்கால காய்ச்சலில் இருந்து உங்களை காத்துக் கொள்ளும் முறையாகும்.