Skip to main content

பதறவைக்கும் சிசிடிவி காட்சி; தறிகெட்டு ஓடிய டெஸ்லா கார்; விசாரணையில் இறங்கிய போலீஸ்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Tesla car accident that lost control due technical fault

 

டெஸ்லா கார்விபத்து சம்பவத்தில், அதன் பின்னணியைக் கண்டுபிடிக்க அமெரிக்க நிறுவனத்தின் உதவியை நாட உள்ளூர் காவல்துறை முடிவு செய்ததையடுத்து தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சீன நாட்டின் தெற்கு மாகாணத்தில் குவாங்டன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி காலை 6.30 மணியளவில், ஷான் எனும் 55 வயது முதியவர் டெஸ்லா மாடல் ஒய் வகை கார் ஒன்றை ஓட்டி வந்தார். அந்த டெஸ்லா காரை ஒரு கடைக்கு அருகில் பார்க் செய்வதற்காக அந்த முதியவர் வலதுபக்கம் திரும்பியுள்ளார். அப்போது, பிரேக்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த டெஸ்லா கார் புயல் வேகத்தில் பறக்கத் தொடங்கியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கட்டுக்கடங்காத காளை போல் மாறியது.

 

இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் என்ன செய்வது எனத் தெரியாமல் விபத்து எதுவும் ஏற்படாமல் தடுக்க பெரிதும் முயற்சித்தார். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மக்கள் நிறைந்த சாலையில் மின்னல் வேகத்தில் சென்ற டெஸ்லா கார் கடைசியில் ஒரு சுவற்றில் மோதி தடம் புரண்டது. இந்த விபத்து சம்பவத்தில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

 

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த கார் ஓட்டுநரை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து டெஸ்லா நிறுவனம் கூறும்போது, “டெஸ்லா காரில் ப்ரேக் ஃபெயிலியர் என்ற கருத்தை ஏற்க முடியாது. ஆனால், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.” எனத் தெரிவித்தது.

 

இந்நிலையில், இந்தக் கார்விபத்து எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய காவல்துறைக்கு உதவுவதாக அமெரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த விபத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய தற்போது மூன்றாம் தரப்பு மதிப்பீட்டு நிறுவனத்தை போலீசார் நாடியுள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்