
ஆப்கானிஸ்தானின் ஹெராஜ் என்ற நகருக்கு வடமேற்கில் சுமார் 40 கி.மீ. தொலைவில் நேற்று (07.10.2023) அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஹெராஜ் நகரத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்நகரைச் சுற்றியுள்ள 6 கிராமங்களில் உள்ள கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இடிபாடுகளில் சிக்கி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலநடுக்கம் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், உலக கோப்பை போட்டிகளின் மூலம் தனக்கு கிடைக்கும் ஊதியம் முழுவதையும் நன்கொடையாக வழங்கவுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் அறிவித்துள்ளார். மேலும் “ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி கேள்விப் பட்டவுடன் அது குறித்து வருந்தினேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளேன்” என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.