Skip to main content

தணியும் போர் பதற்றம்? உக்ரைன் எல்லையில் படைகளை குறைக்கிறது ரஷ்யா!

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

russia

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைன் மீது படையெடுக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை எனக் கூறி வருகிறது. ஆனால் இதனை நம்பாத அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும், போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன. அமெரிக்கா தனது படைகளையும் கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது.

 

ரஷ்யாவும் உக்ரைனுக்கும் தங்கள் நாட்டிற்கும் அருகில் உள்ள பெலாரஸ் நாட்டில் போர்ப் பயிற்சிகளில் ஈடுப்பட்டது. இதனால் போர் பதற்றம் அதிகரிக்கவே அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு தங்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டனர். மேலும் அமெரிக்கா, ரஷ்யா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் படையெடுப்பை தொடங்கலாம் என எச்சரித்தது.

 

இந்தசூழலில் உக்ரைன் எல்லையில் குவித்துள்ள படைகளைத் திரும்பப்பெற ரஷ்யா விதித்த நிபந்தனைகளில் ஒன்றான நோட்டோ கூட்டமைப்பில் சேரக்கூடாது என்ற நிபந்தனையைப் போரைத் தவிர்க்கும் பொருட்டு தனது நாடு ஏற்க வாய்ப்பிருப்பதாக பிரிட்டனுக்கான உக்ரைன் தூதர் வாடிம் பிரிஸ்டைகோ தெரிவித்தார். அதேசமயம் 48 மணிநேரத்திற்குள்ளாக ஒரு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்யாவிடம் கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா நேற்று தெரிவித்தார்.

 

இந்தசூழலில் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை குறைத்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா பாதுகாப்புதுறையின் செய்தி தொடர்பாளர். "தெற்கு மற்றும் மேற்கு ராணுவ மாவட்டங்களின் படைப்பிரிவுகள், தங்கள் பணிகளை முடித்து விட்டு, ஏற்கனவே ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தில் பயணத்தை தொடங்கியுள்ளன. இன்று அவர்கள் தங்கள் ராணுவப் படைத்தளங்களுக்கு செல்ல தொடங்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.

 

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை போர் பதற்றத்தை தணிக்கலாம் என கருதப்படுகிறது. அதேநேரத்தில் எல்லையில் 1.30 லட்சம் படை வீரர்களை குவித்துள்ள ரஷ்யா, எவ்வளவு வீரர்களை திரும்பப்பெறுகிறது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்