Skip to main content

அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
periyar-anna-bday-

 

அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில் செப் 29, 2018, சனிக்கிழமையன்று டெலவர் பள்ளத்தாக்கு தமிழ் நண்பர்கள் தந்தை பெரியாரின் 140வது மற்றும் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளை பெரு விழாவாக ஏற்பாடு செய்திருந்தனர். அதில் டெலவர், பென்சலவேனியா, நியூ செர்சி, மேரிலாந்து மற்றும் விர்சீனியா மாநிலத்திலிருந்து திரளாக தமிழ் மக்கள் வந்து கோலகலமாகக் கொண்டாடி, கருத்துகளை பகிர்நது மகிழ்ந்தனர்.
 

இவ்விழாவின் சிறப்பாக பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றன. திருமிகு. ரமா ஆறுமுகம் மற்றும் திருமிகு. ஜெசிபிரியா பிரசாத் விழாவினை அருமையாக தொகுத்து வழங்கினார்கள். 


 

periyar-anna-bday-


 

சிறுவர்களுக்கான ஓவியப்போட்டியில் (7 வயது வரை) செல்வி. சாஷின் செல்வகுமார் முதலாம் இடத்தையும், செல்வி.கனியன்பு துரைக்கண்ணன் இரண்டாம் மற்றும் செல்வன்.ஆதித் மூன்றாம் இடத்தை வென்றனர். 8 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்ட ஓவியப்போட்டியில் செல்வன். அறிவாற்றல்  முதலாம் இடத்தையும், செல்வன். கௌதமராஜ் இரண்டாம் மற்றும் செல்வி.ரித்திகா மகேந்திரன் மூன்றாம்இடத்தை பெற்று பரிசை தட்டிச்சென்றனர்.


இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ரஜினி தென்னிந்திய உணவகம், டெலவர் அளித்த மதிய உணவை உண்டு மகிழ்ந்தனர். திருமிகு. ஜெய் (ரஜினி தென்னிந்திய உணவகம் உரிமையாளர்) கூறுகையைில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சமூகநீதி தொண்டினால் தான், என் போன்ற எளிய பிள்ளைகள் அமெரிக்கா வரவும், இவ்வுயரத்தை அடையவும் முடிந்தது. அதற்கு நானும், எங்கள் உணவகமும் செய்யும் சிறு நன்றிக்கடனே இது என்று சிலாகித்தார்.


தொடர்ந்து வினாடி வினாப் போட்டிகள் நடைபெற்றன. 9 குழுக்குள், 17 குழந்தைகள் பங்கு பெற்றனர். குழுவின் பெயர்களாக பெரியார், அண்ணா அவர்கள் பங்களித்த பத்திரிக்கைகளின் பெயர்கள் (விடுதலை, குடியரசு, Revolt (புரட்சி), காஞ்சி, பாலபாரதி, மாலைமணி, நம்நாடு, Homeland (தாய்நாடு), நவயுகம்) சூட்டப்பட்டிருந்தது சிறப்பு. மொத்தம் 5 சுற்றுகள் என்று திட்டமிட்டருந்தது, இருப்பினும் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்துக்கு கடும் போட்டி நிலவியதால் அதிகச் சுற்றுகள் சென்றது. இறுதியில் முதல் பரிசை தட்டி சென்றது “குடியரசு” அணியில் போட்டியிட்ட செல்வி.ஹர்ஷினி கண்ணன் மற்றும் செல்வன். நரேன் கோபாலகிருஷ்ணன் ரேகா. இரண்டாம் இடத்தை “பாலபாரதி” அணியில் போட்டியிட்ட செல்வன்.பிரணவ் ஆதித்யா மற்றும் செல்வி. அமிர்த்தா ராமசுப்பரமணியம்-மும், மூன்றாம் இடத்தை “நம்நாடு” அணியில் போட்டியிட்ட செல்வன்.நவீன் சுரேஷ் மற்றும் செல்வன்.பிரத்யுஷ்  கார்த்திகேயன்-ம், முறையே தட்டிச்சென்றனர். 


 

periyar-anna-bday-




வினாடி வினா போட்டியை நடத்திய திருமிகு. ராஜ்குமார் களியபெருமாள் கூறுகையில், “பெரியார், அண்ணா வாழ்க்கை மற்றும் கொள்கைகள் சார்ந்த கேள்விகள் கேட்க்கப்பட்ன.  அண்ணாவைப் பற்றியோ அல்லது பெரியாரைப் பற்றியோ கட்டுரை எழுதுங்கள் என்று கூறினால் உடனே இரு பக்கம் எழுதி விடுமளவுக்கு பயிர்சி எடுத்திருக்கிறார்கள். இதுவே இந்த போட்டியின் நோக்கம்.  அது நிறைவேறியதாக உணர்கிறோம். கடல் கடந்த அமெரிக்க மண்ணில் பெரியாரிய சிந்தனைகளை பெரியார் பிஞ்சுகள் அறிந்து பதிலிளித்தது உள்ளபடியெ மகிழ்ச்சியளித்தது” என்றார். அவர்களைப் பயிற்றுவித்த பெற்றோர்களுக்கும் அவர் நன்றி கூறினார். 


திருமிகு. தனம் பெரியசாமி அவர்கள் சிறப்பு பேச்சாளராக வந்திருந்து சிறப்பளித்தார். ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த அதே தெருவில் பெரியார் வாழ்ந்த காலத்தில் வசித்தவர். பெரியாரை பற்றிய அரிய தகவல்களை அவர் கூறி மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார்.


அதனைத் தொடரந்து பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டியில் 9 நபர்கள் போட்டியிட்டு. அத்தலைப்பாவது, "’கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ - பேரறிஞர் அண்ணா”, “பகுத்தறிவுப் பகலவன் பெரியார்” மற்றும் “அமெரிக்காவும், தமிழ்நாடும் - சமூக நீதி ஓர் ஒப்புமைப் பார்வை” என்ற மூன்று தலைப்புகளில் பேசினர். முதல் இடத்தை திருமிகு.செல்வக்குமார் வேலு அவர்களும், இரண்டாம் இடத்தை திருமிகு.பிரிஸ்ஸில்லா அவர்களும் மற்றும் மூன்றாம் இடத்தை திருமுகு. விஜயலட்சுமி அவர்களும் பெற்றனர். 


விழாவின் முத்தாய்ப்பாக தமிழர் மரபான கும்மி மற்றும் பறையிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூடிய அனைவரும் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.


“சமூகநீதிக் காவலர்கள் பெரியார், அண்ணா” என்ற தலைப்பின் கீழ் சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணியம் மற்றும் சமத்துவம் என்ற துணை தலைப்புகளோடு கருத்தரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் திருமிகு. அல்லி, திருமிகு. தேவானந்த், திருமிகு. கிருஷ்ணன், திருமிகு. மெரிலின் மற்றும் திருமிகு. தீபன் பங்குப்பெற்று பெரியார், அண்ணா பற்றி கவிதைகளையும் செய்திகளையும் அரங்கத்திற்கு பகிரந்தனர். இக்கருத்தரங்கத்தை திருமிகு. பிரசாத் பாண்டியன் நெறியாள்கையை செய்தார்.


"சாமானிய மனிதர்கள்" என்ற தலைப்பில் பல தரவுகளுடன்  தோழர் முனைவர் சொர்ணம் சங்கர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் திரையில் 1901 முதல் தற்போது வரையிலான தமிழ் சமூக வளர்ச்சியின் வேகத்தையும், அதற்கான பெரியார், அண்ணாவின் பங்களிப்பையும் விவரித்துக் கூறினார்.  இதன் அதன் பின் தம்ழ்நாட்டிலிருந்து தனது மகனைப் பார்க்க அமெரிக்கா வந்திருந்த திருமிகு. வசந்த கோகிலா அவர்கள் நாகூர் அனிபாவின் “எங்களை ஏங்கவிட்டு  எங்கே சென்றாய்.. அண்ணா..” என்ற பாடலை அருமையாகப் பாட அரங்கமே அமைதியில் மூழ்கியது. அனைவரும் எழுந்து நின்று அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


"தமிழகத்தின் விடிவெள்ளி பெரியார்" என்ற தலைப்பில் தோழர் திருமிகு. கனிமொழியின் பேச்சு அநீதிகளை வெடித்துச் சிதறவைக்கும் ஒரு துப்பாக்கித் தோட்டா போலிருந்தது. தற்கால அரசியலின் அநீதிகளைக் களைய பெரியாரின் சிந்தனைகள் எப்படி பயன்படும் என்று எடுத்துரைத்தார். 


விழாவிற்கு வந்திருந்த அனைத்து பெண்களுக்கும் “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்ததை விழாக்குழுவில் ஒருவரான திரு.ராஜ்குமார் வழங்கினார்.


விழாவின் இறுதியாக பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. விழாவிற்கு வந்த அனைவருக்கும் திருமிகு. துரைக்கண்ணன் நன்றியுரை  கூற விழா இனிதே நிறைவுப்பெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை விதி; மூடப்பட்ட பெரியார் சிலை அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் திறப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 closed Periyar statue will reopen in the next half hour

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.