Skip to main content

பழமைவாத ஆட்சி அச்சத்தில் தப்பி ஓடும் ஆப்கானிஸ்தான் மக்கள்!

Published on 15/08/2021 | Edited on 15/08/2021

 

The people of Afghanistan fleeing in fear of the conservative regime!

தலைநகர் காபூலை கைப்பற்றியதை அடுத்து, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்களின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வருகிறது. இதனிடையே, அதிபர் அஷ்ரஃப் கனி தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரம் தலிபான்கள் வசம் சென்றிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்த தலிபான்கள் இறுதியாக தலைநகர் காபூலிலும் நுழைந்தனர். தலிபான்கள் கை ஓங்கிய நிலையில் அதிகாரத்தை அவர்களுக்கே விட்டு தர, அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

 

நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்கும் இடைக்கால அரசின் தலைவராக முன்னாள் அமைச்சர் அலி அகமது ஜலாலி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை விட்டு இம்மாத இறுதியில் அமெரிக்க படைகள் முற்றாக வெளியேற உள்ளனர். இந்நிலையில், குந்தூஸ், கந்தஹார் உள்ளிட்ட முக்கிய நகரங்களை மின்னல் வேகத்தில் கைப்பற்றிய தலிபான்கள் இறுதியில் தலைநகர் காபூலையும் தங்கள் வசம் கொண்டு வந்து அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர். 

 

பழமைவாத தலிபான்கள் வசம் அதிகாரம் வந்துவிட்டதால் ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் அச்சமடைந்து, மூட்டை முடுச்சிகளுடன் பாகிஸ்தானில் தஞ்சம் புக முற்பட்டுள்ளனர். இதற்காக பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏராளமானோர் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

The people of Afghanistan fleeing in fear of the conservative regime!

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளைப் பாதுகாப்பாக மீட்க அதிபர் பைடன் ஆயிரம் வீரர்களை அங்கு அனுப்பியுள்ளார். காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சில ஹெலிகாப்டர்கள் வந்த நிலையில், அதில் ஏறி பல அதிகாரிகள் வெளியேறிவிட்டனர். மேலும், வெளியே செல்லும் முன் முக்கிய ஆவணங்கள் பலவற்றை அமெரிக்க அதிகாரிகள் எரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வந்தது. 2001- ஆம் ஆண்டு நியூயார்க்கில் உலக வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்கா படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டன. 20 ஆண்டுகள் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் இறந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான கோடி அமெரிக்க டாலர்களும் இழப்பு ஏற்பட்டது. 

 

இதைத் தொடர்ந்து, இம்மாத இறுதியில் படைகளைத் திரும்பப் பெற அமெரிக்க அதிபர் பைடன் முடிவு செய்துள்ளார். இந்தச் சூழலில் தான் பழமைவாத தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை மீட்டெடுத்துள்ளனர். இதையடுத்து, அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.  அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வேறு நாட்டு சென்றுவிட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

The people of Afghanistan fleeing in fear of the conservative regime!

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்கியது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றது. அங்கிருந்து 129 பேருடன் அந்த விமானம் டெல்லி வந்தடைந்தது. 

 

சார்ந்த செய்திகள்