Skip to main content

அதிபர் குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் கரோனா....

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

michelle bolsonaro tested positive for corona

 

 

பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவை தொடர்ந்து, அவரது மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

ஆரம்பம் முதலே கரோனா தடுப்பில் அலட்சியம் காட்டிவந்த அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனோரோ, ஊரடங்கு உள்ளிட்ட எந்தவிதத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் தீவிரம் காட்டவில்லை. இதனையடுத்து அங்கு லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பெரும் பாதிப்புக்கு பின்னர் நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

இந்நிலையில், அந்நாட்டு அதிபர் போல்சனாரோவுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். ஆனால், வீட்டில் தன்னால் தனித்திருக்க முடியவில்லை எனக்கூறிய போல்சனோரோ, சில நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் கரோனா பரிசோதனையை மேற்கொண்டார். இரண்டாவது மருத்துவப் பரிசோதனையின் முடிவில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது. இந்நிலையில், சிகிச்சைக்கு பின் கடந்த வாரம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டது.

 

சுமார் 20 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர் கரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், தற்போது அவரது மனைவி மிச்சல் போல்சனாரோவுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில், மிச்சல் போல்சனாரோ நல்ல உடல்நலத்துடன், இயல்பாக இருப்பதாக அதிபர் மாளிகை செய்திகள் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்