Skip to main content

இந்தியா- கனடா உறவு விரிசல்; இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்கள்?

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

India-Canada relationship strained, Evidence against India?

 

பயங்கரவாத அமைப்புகள் தங்களுக்கென்று தனி நாடு வேண்டும் பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள பயங்கரவாத ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அதில் கனடா நாட்டில் உள்ள இந்து கோவில்கள் மீது அதிக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காலிஸ்தான் ஆதரவு குழுக்களுக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.  

 

கனடாவில் உள்ள பயங்கரவாத புலிப் படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் மற்றும் ஆதரவு குழுக்களின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், பயங்கரவாத புலிப் படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவர், கடந்த 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடா சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். இவருடைய படுகொலைக்கு இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக பயங்கரவாத தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதையடுத்து, “ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. கனடாவின் குடிமகன் ஒருவர் படுகொலைக்கு வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில், உண்மை விவரங்கள் தெரிய கனடாவுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்” என அந்நாட்டு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து கனடா தூதரக உயர் அதிகாரியை ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும் கனடாவின் குற்றச்சாட்டையும் மறுத்திருந்தது. இதையடுத்து கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, இந்தியா வரும் கனடா நாட்டினருக்கான விசா சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. 

 

இந்த நிலையில், பயங்கரவாத அமைப்பு தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்துள்ளார். அந்த குற்றச்சாட்டில், 5 ஐஸ் என்ற உளவுத்துறை அமைப்பின் மூலம், இந்திய தூதரக அதிகாரிகளின் தொலைப்பேசி உரையாடலை சேகரித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த 5 ஐஸ் உளவுத்துறை அமைப்பு, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு உளவுத்துறை கூட்டணியாகும். இந்தியா - கனடா மோதலில் 5 ஐஸ் உளவுக்குழு என்ற அமைப்பு இந்தியாவிற்கு எதிரான விசாரணையை கண்காணித்து வருகிறது. இவர்கள் வெளிப்படையாக இதில் கூட்டறிக்கை வெளியிடவில்லை என்றாலும் இது குறித்து விசாரணை வேண்டும் என்பதில் இந்த குழு தீர்க்கமாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்