
அமெரிக்காவில், ஒன்பது வயது சிறுவனைத் தத்தெடுக்க ஒரே நேரத்தில் சுமார் 5000 பேர் விண்ணப்பித்திருக்கும் நிகழ்வு நடந்துள்ளது.
அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் ஜோர்டன் மற்றும் அவரது தம்பி பிரைசன் ஆகிய இருவரும் பெற்றோரை இழந்த பிறகு கடந்த 2014ம் ஆண்டு முதல் ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்தனர். இதில் பிரைசனை கடந்த ஆண்டு ஒரு குடும்பம் தத்தெடுத்தது. அதன் பின்னர் தனிமையில் வாடிவந்த ஜோர்டன், குடும்பத்திற்காக ஏங்கியுள்ளார். இந்நிலையில், ஜோர்டனின் கதை குறித்து அறிந்த உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்று, ஜோர்டனின் கவலையை வெளியுலகிற்கு காட்டும் வகையிலான பேட்டி ஒன்றை எடுத்து வெளியிட்டது.
அந்த பேட்டியில் பேசிய ஜோர்டனிடம், அவனின் ஆசை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அந்த சிறுவன், "எனக்கு ஒரு குடும்பம் வேண்டும், குறைந்தபட்சம் ஒரு அம்மா வேண்டும் அல்லது ஒரு அப்பா வேண்டும். இதை தவிர வேறு எதுவும் எனக்கு தேவையில்லை. அம்மா, அப்பா இருந்தால் எப்போதும் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கலாம்" எனக் கூறியிருந்தான். பெற்றோருக்கான ஏக்கத்துடன் கூடிய சிறுவனின் இந்த வீடியோ இணையத்தில் பரவி பலரையும் கண்ணீர்விட வைத்தது. இதன் வெளிப்பாடாக இந்த வீடியோ வெளியான 12 மணி நேரத்தில், சுமார் 5000பேர் அவனைத் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.