Skip to main content

விபத்தில் வாலிபர் மரணம்; பேருந்தை தீ வைத்து எரித்தவர்கள் கைது!

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 


வாழப்பாடி அருகே, வாலிபர் மரணத்திற்குக் காரணமான தனியார் பேருந்தை தீ வைத்து எரித்ததாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள கருமந்துறை கோயில்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டி மகன் இளையராஜா (32). கடந்த 17ம் தேதி மாலை, பகடுபட்டு பிரிவு சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து கருமந்துறைக்குச் சென்ற ஒரு தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  


இதில் தூக்கி வீசப்பட்ட இளையராஜா, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இளையராஜாவின் உறவினர்கள், ஆத்திரத்தில் அந்த பேருந்தை அடித்து நொறுக்கினர். சிலர், பேருந்துக்கு தீ வைத்ததில், பேருந்து கொளுந்துவிட்டு எரிந்தது. 

 

bus fire


விபத்தில் இறந்த இளையராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவருடைய இரு குழந்தைகளின் கல்விச்செலவை அரசு ஏற்க வேண்டும், விபத்து நிகழ்ந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சடலத்துடன் போராட்டம் நடத்தினர். 


டி.எஸ்.பி.க்கள், வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதையடுத்தே இளையராஜாவின் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

arrest



இதையடுத்து பேருந்தை தீ வைத்து எரித்த நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் முடுக்கிவிட்டனர். முதல்கட்டமாக நிகழ்விடத்தில் சட்டவிரோதமாக கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, பேருந்தை தீ வைத்து எரித்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது கருமந்துறை காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு வழக்குப்பதிவு செய்தார். 


நிகழ்விடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சடையன் (47), தமிழ்ச்செல்வன் (28), வெங்கடேசன் (38), கோவிந்தராஜ் (35), தீர்த்தன் (55), கணேசன் (27), ஹரிராம் (32), சந்தோஷ் (24), துரைசாமி (37) ஆகிய 9 பேரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த நிகழ்வு தொடர்பாக  மேலும் சிலரை தேடி வருகின்றனர். காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை கருமந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.