வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோவில் அருகே வேலூரில் இருந்து காட்பாடி சித்தூர் செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவு மூன்று இளைஞர்கள் யமஹா பைக்கை நிறுத்திவிட்டு அதன் மீது பிறந்தநாள் கேக்கை வைத்து அதை பட்டாக்கத்தியைக் கொண்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். அதோடு இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடிய பூவரசன் என்ற இளைஞருக்கு ஆள் உயர பூ மாலை அணிவித்து, சரவெடிகளைக் கொளுத்தி நடுரோட்டில் வீசி பந்தா செய்தனர். அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மீதும், பேருந்து மீதும் பட்டாசுகளைத் தூக்கி வீசினர்.
மிகவும் பரபரப்பான சாலையில் நள்ளிரவில் சாலையோரம் கையில் பட்டாசு பட்டாக் கத்தியுடன் நின்று கேக் வெட்டி இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் அரை மணி நேரமாக அந்த இடத்தில் அட்டகாசம் செய்துள்ளனர் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள். இரவில் பொதுமக்கள் அச்சமின்றி வரலாம் அந்தளவுக்கு இரவில் காவலர்கள் பாதுகாப்பு ரோந்து வருகிறார்கள் என்கிறது மாவட்ட காவல்துறை. மாநகரின் முக்கிய சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக குடித்துவிட்டு பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்கிற பெயரில் பட்டாக் கத்தியுடன் அட்டகாசம் செய்த இடத்துக்கு காவல்துறை வரவில்லை.
இரவு 12 மணிக்கு ரோந்து காவலர்கள் என்ன செய்தார்கள்? எங்கு சென்றார்கள்? அட்டகாசம் செய்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.