Skip to main content

“மூஞ்சில ஆசிட் அடிக்காம விடமாட்டேன்..” - கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

young man threatens college student that he will throw acid on her face

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது அழகப்பா அரசு கலை கல்லூரி. இந்த கல்லூரியில், வணிகவியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி தீபிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தேசிய அளவில் பேட்மிட்டன் வீராங்கனையாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபிகாவிற்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அவரது உறவுக்கார பையனான சத்யா என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறியது. ஆனால், சத்யாவின் நடவடிக்கை பிடிக்காததால் தீபிகா சத்யாவிடம் இருந்து விலகியுள்ளார். இதை விரும்பாத சத்யா, தன் காதலியான தீபிகா செல்லும் இடமெல்லாம் அவரை பின்தொடர்ந்து, அவருக்குத் தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் இதைத் தாங்க முடியாத தீபிகா இந்தச் சம்பவம் குறித்து உறவினர்களிடம் கூறிக் கதறி அழுதுள்ளார்.

 

இதையடுத்து, தீபிகாவின் உறவினர்கள் சத்யாவைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சத்யா, தீபிகாவை பழிவாங்க வேண்டும் எனக் காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், தீபிகா பேட்மிண்டன் போட்டித் தொடருக்காக ஹைதராபாத் செல்லவிருந்தார். இதையறிந்த சத்யா அவரது சித்திக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். அதில் சத்யா பேசும்போது ''சித்தி.. அவங்க பொண்ண எவ்ளோ பத்திரமா பாத்துக்க முடியுமோ, பாத்துக்க சொல்லுங்க.. அவ மூஞ்சில ஆசிட் அடிக்காம நா விடவே மாட்டேன்'' எனப் பேசியுள்ளார்.

 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள், அந்த ஆடியோவை தீபிகாவின் குடும்பத்தினரிடம் காண்பித்துள்ளார். பின்னர், சுதாரித்துக்கொண்ட தீபிகாவின் குடும்பத்தினர், தங்களது மகளை ஹைதராபாத்துக்கு அனுப்பினால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயத்தில் தீபிகாவை வெளியில் எங்கும் அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தனர். இதையறிந்த சத்யா கடந்த 27 ஆம் தேதி பெண்ணின் வீட்டிற்கு ஆசிட் பாட்டிலுடன் சென்று தகராறு செய்துள்ளார். இளைஞரின் இச்செயலால் பதறிப்போன தீபிகாவின் குடும்பத்தார், சத்யா மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள சத்யாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

காதலிக்க மறுத்த பெண்னை, ஆசிட் அடித்து விடுவதாக இளைஞர் செல்போனில் மிரட்டிய சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்