Skip to main content

அரசு மரியாதையுடன் இளம் காவலர் சுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
dhuraimuthu

 

வாரண்ட்டை நிறைவேற்றும் வகையில் தொடர்புடைய கொலை குற்றவாளியான ஏரல் துரைமுத்துவைப் பிடிக்கப்போன, க்ரைம் போலீசின் இளம் காவலர் சுப்பிரமணியம் துரைமுத்துவைத் துரத்தியபோது நடந்த தகராறில் துரைமுத்து வீச முற்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதன் முன்னோட்டத்தை ஏற்கனவே நக்கீரன் இணையதளம் வெளிப்படுத்தியிருந்தது.

 

மங்கலக்குறிச்சியில் நடத்தப்பட்ட இரட்டைக் கொலைக் காரணமான துரைமுத்துவை பழிவாங்க நினைத்த எதிர்த்தர்ப்பினர் துரைமுத்துவின் சகோதரன் கண்ணனைக் கொன்றுள்ளனர். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர் தரப்பின் கணேசபாண்டியனை பேட்டைப் பகுதியில் துரைமுத்து பழிவாங்யிருக்கிறார். எதிர் தரப்பில் மூன்று உயிரிழப்புகள் என்பதால், துரைமுத்துவை விடவும் வலுவான எதிர்த்தரப்பு துரைமுத்துவை கொலை செய்ய வேவு பார்த்த நேரத்தில்தான் அவர்களைப் பழிவாங்க தன் சகாக்கள் நான்கு பேர்களுடன் வேட்டைத் தடுப்பு காவலரான தனது உறவினர் சுடலைக்கண்ணன் வேலை பார்க்கும் மணக்கரைப் பக்கம் உள்ள வனத்துறை காட்டின் ஒரு பம்ப்செட்டில் 10 நாட்களுக்கும் மேலாக பதுங்கியிருந்துள்ளனர். இந்த சமயத்தில் துரைமுத்துவை பிடிக்கச் சென்றபோதுதான் காவலர் சுப்பிரமணியம் வெடிகுண்டுச் சம்பவத்தில் உயிரிழந்தார்.

 

இதனிடையே வெடிகுண்டுச் சம்பவத்தில் பலியான இளம் காவலர் சுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கத்திற்காக அவரது சொந்த ஊரான பண்டாரவிளைக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் கொண்ட பெட்டியை நெல்லை போலீஸ் கமிஷனர் தீபக்தாமோர், தென்மண்டல ஐ.ஜி.முருகன் மற்றும் போலீசார் சுமந்து வந்தனர்.

 

மூன்று மாதக் கர்ப்பிணியான காவலர் சுப்பிரமணியனின் மனைவி, தன் 10 மாத ஆண் குழந்தையை தன் மடியில் வைத்துக்கொண்டு டி.ஜி.பி. திரிபாதி மற்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடமும் கண்ணீர் வடித்தார், இந்த சம்பவம் அனைவரின் கண்களையும் குளமாக்கியதோடு அங்கிருந்தோரின் நெஞ்சையும் கலங்கடித்துவிட்டது.

 

சுப்பிரமணியனின் வயதான தந்தை பெரியசாமி பெற்ற மகனைப் பறி கொடுத்த துயரத்திலிருந்தார். அரசு மரியாதையோடு ஆயுதப்படையினரின் 30 குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த இளம் காவலர் சுப்பிரமணியனின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 

தான் துரத்துவது கொடூர கொலைக் குற்றவாளி என்று தெரிந்தே உயிரைத் துச்சமாக மதித்து, கடமை உணர்வோடு அரச கட்டளையை நிறைவேற்ற பாய்ந்து சென்ற இளம் காவலர் சுப்பிரமணியன், தன்னுயிரைக் கொடுத்து கடமையைப் பழுதில்லாமல் நிறைவேற்றினார் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்