Skip to main content

பெண் அரசு ஊழியரை மிரட்டிய நபரை கைது செய்த மகளிர் போலீஸ்...!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

Women police arrest man who threatened female government servant ...!


கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது பெண்மணி, வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வருகிறார். இவருக்குத் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமண தகவல் இணையதளத்தில் தமக்கு 'மணமகன் தேவை' என்று அந்த அரசு பெண் ஊழியர் விளம்பரம் கொடுத்துள்ளார். 


இந்த விளம்பரத்தைப் பார்த்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள அணையேரி உல்லாசம் நகரைச் சேர்ந்த 44 வயது ஜோசப் ஸ்டாலின் என்பவர், அந்தப் பெண் ஊழியரை தொடர்பு கொண்டு பேசிவிட்டு, அவரைத் தேடி கடலூர் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணிடம் தான் பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடத்தி வருவதாகக் கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு அந்தப் பெண்ணிடம் அடிக்கடி செல்ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 


வெளியிடங்களுக்கு இருவரும் சென்று வந்துள்ளனர். இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் பெண் வீட்டார் தரப்பில் ஜோசப் ஸ்டாலினை தொடர்புகொண்டு விவரங்கள் கேட்டுள்ளனர். அவர்களுக்கு அவர் எந்த விவரமும் தரவில்லை. இந்த நிலையில் அந்தப் பெண்ணிடம் பேசிய ஜோசப் ஸ்டாலின், என்னைத் திருமணம் செய்யாமல் போனால் என்னிடம் உள்ள (நாம் இருவரும் சேர்ந்து எடுத்த) ஃபோட்டோக்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 


கடந்த 5ஆம் தேதி செஞ்சி அருகில் உள்ள மட்டபாறை கிராமத்தில் உள்ள ஜோசப் ஸ்டாலின் உறவுப் பெண்ணான ஜெசிந்தாள் என்பவரது வீட்டுக்கு வருமாறு மிரட்டி அந்தப் பெண் அரசு ஊழியரை வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்துள்ளார். ஜோசப் ஸ்டாலின், இதன் பிறகு திருமணத்திற்காக, 40 ஆயிரம் பணம் இரண்டரை சவரன் நகைகளை அந்தப் பெண்ணிடமிருந்து வாங்கியுள்ளார். 


இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை அந்தப் பெண் அரசு ஊழியரின் சகோதரிக்கு அனுப்பி உள்ளார், ஜோசப் ஸ்டாலின். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர், ஜோசப் ஸ்டாலின் குறித்து தீவிரமாக விசாரித்துள்ளனர். அதில், ஜோசப் ஸ்டாலின் ஏற்கனவே திருமணமானவர். பெண் அரசு ஊழியரை பொய் சொல்லி ஏமாற்றி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அரசு ஊழியர் குடும்பத்தினர் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை இதனால் கோபம் அடைந்த ஜோசப் ஸ்டாலின் அந்தப் பெண் அரசு ஊழியரிடம் உனது ஆபாசப் படங்களையும் வீடியோவையும் இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். 


இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அரசு ஊழியர், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ஜோசப் ஸ்டாலின் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட மட்டப்பாறை ஜெசிந்தாள் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, ஜோசப் ஸ்டாலினை கைது செய்துள்ளனர் அனைத்து மகளிர் போலீசார்.

 

 

 

சார்ந்த செய்திகள்