Skip to main content

பள்ளி மாணவியைக் கடத்திச்சென்று கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் பாலியல் வன்கொடுமை

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

 

Two men, including a college student, kidnapped and sexually assaulted a schoolgirl!


தர்மபுரி அருகே பள்ளி மாணவியைக் காட்டுக்குள் தூக்கிச்சென்று கல்லூரி மாணவரும், அவருடைய நண்பரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள மிட்டாசின்னஅள்ளியைச் சேர்ந்தவர் ராஷ்மிகா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இண்டூர் அருகே தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். ராஷ்மிகா தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். நவ. 16 ஆம் தேதி அன்றும் அவர் வழக்கம்போல் பள்ளிக்கு சைக்கிளில் சென்றார். பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் சிறுமியை வழிமறித்து காட்டுப்பகுதிக்குள் தூக்கிச்சென்றனர். அங்கு மறைவான இடத்தில் வைத்து, அவர்கள் இருவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய பாட்டி உறவுக்காரர்களை அழைத்துக்கொண்டு பல இடங்களில் தேடிப்பார்த்தார். ராஷ்மிகா பள்ளி முடிந்து வழக்கமாக ஒரு ஒற்றையடிப் பாதை வழியாகத்தான் வீட்டுக்கு வருவார். அந்த வழியாகச் சென்ற உறவினர் ஒருவர், பாதையிலேயே அவருடைய சைக்கிள் கிடந்ததைப் பார்த்தார். அதையடுத்து, அங்குள்ள காட்டுப்பகுதியில் தேடிப்பார்த்த போது ஒரு முட்புதர் அருகே சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

 

மருத்துவப் பரிசோதனையில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து இண்டூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், இந்தப் புகார் பென்னாகரம் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

முதற்கட்ட விசாரணையில், இண்டூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும், அவருடைய நண்பர் ஒருவரும் சேர்ந்துதான் பள்ளி மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்