
ஜெயங்கொண்டத்தில் பெண்ணை கொலை செய்து நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 5வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் குணசேகரன்(50). இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி பாரதி(45). இவர்களுக்கு ஆதித்யன் (12) என்ற மகனும், ஆர்த்தி (14) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அதே ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று காலை இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். குணசேகரன் திட்டக்குடிக்கு சென்றுவிட்டார். தினமும் பள்ளி முடிந்தவுடன் பாரதி பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை அழைத்து வருவது வழக்கம்.

நேற்று அழைக்க வராததால் குழந்தைகள் இருவரும் தாங்களாகவே வீட்டிற்கு நடந்து வந்தனர். வீட்டிற்கு வந்து கதவை தட்டியபோது கதவு திறக்கவில்லை. பூட்டிய நிலையில் இருந்தது. பின்பக்கமாக சென்று சமையல்கூடம் ஜன்னல் வழியே பார்த்தபோது தாய் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தைகள் அலறினர்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தெரு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாரதி இரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பாரதியின் கழுத்தில் கத்தி குத்தும், பின்புறம் தலையல் பலத்த காயமும் இருந்தது. பாரதியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயின் மற்றும் 5 பவுன் செயின் ஒன்றையும் அறுத்து சென்றுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த அனைத்து பீரோக்கள் உடைந்த நிலையிலும் இருந்தன. பீரோ மற்றும் லாக்கரில் இருந்த பவுன் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் கொலை நடந்த வீட்டிலிருந்து அருகில் 2 கி.மீ. தூரத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமம் தெற்கு தெரு வரை சென்று அங்கேயே சிறிது நேரம் சுற்றி வந்த டிக்சி பின்னர் திரும்பி வந்தன. அதன்பின்னர் பெரம்பலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டள்ளன.
தகவலறிந்த எஸ்.பி. அபிநவ்குமார் சம்பவ இடம் வந்து விசாரணை செயயதார். இச்சம்பவம்குறித்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி, இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் வழக்கு பதிவுசெய்து பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பாரதி அணிந்திருந்த தாலிச்செயினில் தாலியை மட்டும் கட்பண்ணி அதனை விட்டு விட்டு, செயின்களை மட்டும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் பாரதி பயன்படுத்திவந்த 2 செல்போன்களையும் எடுத்துச்சென்றுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இப்பகுதி பல தெருக்களில் தெரு விளக்குகள் முழுமையாக எரிவதில்லை. மேலும் தெருக்களின் முன்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தவேண்டும், தற்பொழுது இப்பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் பேர் வந்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் யார், எப்பகுதியிலிருந்து வந்துள்ளனர் என்பதுகூட தெரிவதில்லை. வெளி நாட்டில் உள்ளது போன்று அந்தந்த பகுதிகளில் வேலை செய்ய வரும் முன் அவர்களின் முழுவிபரம் பெறப்பட்டு அவர்களுக்கென்று அடையாள அட்டை வழங்கி கண்காணிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றனர்.