Skip to main content

விளையாடிய இடத்தில் காத்திருந்த ஆபத்து! பட்டாசு விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள்!

Published on 08/07/2018 | Edited on 08/07/2018
siv

 

பட்டாசுத் தொழிலில்,  தொடர்ந்து விதிமீறல் செய்துவருபவர்களால்,  சிறுவர்கள் விளையாடுவதற்குகூட தகுதியில்லாத ஊராகிவிட்டது சிவகாசி.   ‘ஒரேயடியாக இப்படிச் சொன்னால் எப்படி?’ என்று கொந்தளிப்பார்கள் பட்டாசு ஆலை அதிபர்கள். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, எந்த ஒரு காரியத்தையும் துணிந்து பண்ணலாம் என்பது சிலருடைய எண்ணமாக இருக்கிறது. அதனால்தான், சீரியஸாக சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.   ஒரு  துளி விஷமானது,  ஒரு குடம் பாலை விஷமாக்கிவிடும் அல்லவா? அப்படி ஒரு சம்பவம்தான் இன்று (8-7-2018) சிவகாசியில் நடந்திருக்கிறது. 

 

பள்ளி மாணவர்களான பெர்தீபனும் அருண்குமாரும் நண்பர்கள்.  சிவகாசி – மீனம்பட்டியைச் சேர்ந்தவர்கள். ஞாயிறு விடுமுறை என்பதால், விளையாடுவதற்காக நாரணாபுரம் சாலையில் உள்ள ஓடைக்குச் சென்றனர். அங்கு விதிமீறலாக, பொது இடமான ஓடையில் பட்டாசுக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. சிறுவர்கள் இருவரும் விளையாட்டாக, தீக்குச்சியைப் பற்ற வைத்து,  அந்தக் கழிவுகள் மீது வீசியிருக்கின்றனர். அப்போது கழிவுக்குவியல் வெடித்துச் சிதறியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அருண்குமார் 30 சதவீத தீக்காயங்களுடனும், பெர்தீபன் 60 சதவீத தீக்காயங்களுடனும் சிவகாசி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.     

 

பட்டாசு ஆலை வாகனங்கள் மூலம் வெளியே எடுத்து வரும் கழிவுகளை, அனுமதிக்கப்பட்ட இடங்களில்,   சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை பொறுப்பாளரின் மேற்பார்வையில் தீவைத்து சாம்பலாக்கிவிட வேண்டும். இதைச் செய்யாமல், கண்ட இடத்திலும் பட்டாசுக் கழிவுகளைக் கொட்டுவது அப்பட்டமான விதிமீறல் ஆகும். சிவகாசி கிழக்கு காவல்நிலையத்தில் இந்த வழக்கு பதிவாகி, விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 

 

விபத்து என்பது பட்டாசு ஆலையிலோ,  பட்டாசுக் கடையிலோதான்  நடப்பது வழக்கம். சிறுவர்கள் விளையாடும் இடங்களையும் விட்டுவைக்காமல், விபத்துக்கு வழிவகுத்திருப்பது கொடுமைதான்!

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.