Skip to main content

ஆந்திராவிலும் வாக்காளர் அட்டை! பறிபோகிறதா தமிழக அதிமுக எம்.எல்.ஏவின் பதவி?-ஆதாரத்துடன் அம்பலம்!..EXCLUSIVE

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

 

mla

 

18 ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்ட நிலையில்… மீண்டும் ஒரு அ.தி.மு.க., எம்.எல்.ஏவின் பதவி பறிக்கப்படப்போவதாக என்ற பரபரப்பு சர்ச்சை எழுந்திருக்கிறது.

 

சென்னை தி.நகர் தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சத்யா என்கிற சத்தியநாராயணன். இவர், சென்னை கோடம்பாக்கத்தில் வசித்துவருகிறார். கோடம்பாக்கம் முகவரியைக்கொண்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்துதான் 2011-2016 சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு 130- வது வார்டு கவுன்சிலர் ஆனார். பிறகு, 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அதே முகவரியைக்கொண்ட வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்திதான் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார்.

 

இந்நிலையில், தமிழக எம்.எல்.ஏவான சத்யா 2012-ல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி சட்டமன்ற தொகுதியிலும் வாக்காளர் அடையாள அட்டை வாங்கியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியிருக்கிறது.

 

​  MLA

 

இதுகுறித்து, சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோவிடம் நாம் கேட்டபோது, “படிவம்-6  பிரிவு 31-ன் ஒருநபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம் 1950 பிரிவு 17-ன் கீழும் பிரிவு 31 கீழும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 125 ஏ வின் கீழும் ஆறு மாதம் முதல் ஒராண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றம். ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினரே இரண்டு வாக்காளர் அடையாள அட்டையை  அதுவும் வெவ்வேறு மாநிலங்களில் வைத்திருக்கிறார் என்றால் நிச்சயம் தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி மோசடி செய்திருக்கிறார் என்றுதான் அர்த்தம்.

 

அதுவும், தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா 2016 ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கலின்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் 2012  ஆகஸ்ட் 30-ந்தேதி 12 லட்சத்து 33 ஆயிரத்து 680 ரூபாய்க்கு 1200 சதுர அடி வீடு வாங்கியிருக்கிறார். இதுகுறித்து, 2016 சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுவின் அஃபிடவிட்டிலும் தாக்கல் செய்திருக்கிறார். அந்த, வீட்டின் முகவரியில்தான் ஆந்திர மாநிலத்தில் வாக்காளர் அடையாளர் அட்டை வாங்கியிருக்கிறார்.

 

​  MLA

 

ஒருவர் இன்னொரு முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை வாங்க வேண்டும் என்றால் ஏற்கனவே இருக்கும் வாக்காள அடையாள அட்டையை நீக்கம் செய்துவிட்டு புதிய முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும். ஆனால், எம்.எல்.ஏ. சத்யாவோ தனது வேட்புமனு தாக்கலில்கூட ஆந்திராவில் இன்னொரு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை மறைத்திருக்கிறார். இதைவிடக்கொடுமை, சென்னையிலேயே  எம்.எல்.ஏ. சத்யாவுக்கு இரண்டு முகவரியில் வாக்காளர் பெயர் உள்ளது. இப்படி, ஆந்திராவில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துக்கொண்டு… தமிழகத்தில் சென்னை முகவரியின் வாக்காளர் அடையாள அட்டையைப் பபயன்படுத்தி எம்.எல்.ஏவாக இருப்பது சட்டப்படி குற்றம். அதனால், இவரது எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்து சட்டப்படி தண்டிக்கவேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர், தமிழகத்திற்கான தலைமை தேர்தல் அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு புகார் அனுப்பியுள்ளோம். மேலும், இரண்டு மாநில வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தலில் மோசடியாக போட்டியிட்டு கவுன்சிலர் ஆனதால் தமிழக தேர்தல் ஆணையரிடமும் புகார் கொடுத்துள்ளோம்.

 

MLA

 

இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட அதிமுக திநகர் தொகுதி எம்.எல்.ஏ சத்யாவை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது எனது பூர்வீகமே ஆந்திராதான் ஆனால் வளர்ந்தது எல்லாம் சென்னைதான். நான் ஆந்திராவில் இன்னொரு வாக்காளர்அட்டை வாங்கவில்லை காரணம் அந்த அடையாள அட்டையில் எனது பிறந்தநாள் தேதி தவறாக உள்ளது. நானே வாங்கியிருந்தால் உண்மையான பிறந்தநாள் தேதியை வைத்துத்தானே வாங்கியிருப்பேன்? அதனால் ஆந்திராவில் வாக்காளர் அடையாள அட்டை எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை என சமாளித்தார்.    

  

ஏற்கனவே, 18 ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் சூழலில், எம்.எல்.ஏ. சத்யாவின் வாக்காளர் அடையாள அட்டை மோசடி அதிமுகவுக்கு புதிய சிக்கலை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.