Skip to main content

நெஞ்சை உருக்கும் வாசகங்கள்... கஜா பாதிப்பு களத்தில் இருந்து சிவசங்கர் -2-

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

 

gaja sss



 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயணித்தவர்கள் ஒவ்வொரு ஊரின் முனையிலும், ஒவ்வொரு சாலையின் திருப்பத்திலும் அந்த அறிவிப்பு பலகைகளை, பதாகைகளை தவிர்த்திருக்க முடியாது.

 

பலகை என்றால், பேருந்து நிறுத்த அறிவிப்பு பலகையோ, தனியார் விளம்பர பலகைகளோ தான். அதன் மீது காகிதத்தை ஒட்டி எழுதியிருந்தார்கள். பதாகைகள் என்றால், நான்கு முழ வேட்டியை பாதியாகக் கிழித்து, அதில் எழுதி கட்டி இருந்தார்கள். அதில் இருந்த வாசகங்கள் நெஞ்சை உருக்கக் கூடியவை.

 

"உதவிக் கரம் நீட்டுங்கள்", " இங்கு 135 குடும்பங்கள் தங்கி இருக்கிறார்கள்", "உணவுப் பொருட்கள் வழங்கவும்", "கஜா புயல் நிவாரண முகாம்", "உள்ளே ஒரு கிலோமீட்டரில் முகாம் இருக்கிறது", இப்படியான அறிவிப்புகள் நீக்கமற நிறைந்திருந்தன.

 

அறிவிப்பு பலகைகள் மாத்திரமல்ல, சாலையோரங்களில் மக்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர், உதவி எதிர்பார்த்து. சாலை ஓரம் இருக்கும் சிறு பாலக் கட்டைகள், பேருந்து நிறுத்தங்கள், மரத்தடிகள், சில இடங்களில் ஏதுமற்ற வனாந்தரங்களிலும் மக்கள் அமர்ந்திருந்தனர்.

 

திருத்துறைப்பூண்டியில் இருந்து,  கத்திமேடு, வடமழை, கரியாப்பட்டிணம் வழியாக வேதாரண்யம் நகரை அடைந்தோம். வேதாரண்யம் நகராட்சிக்குள்ளாகவே கடைகோடியில் இருக்கும் பகுதி. ஒரு சில ஓட்டு வீடுகளை தவிர்த்து, முற்றிலும் குடிசை வீடுகள். குடிசை வீடுகள் சீர்குலைந்து கிடந்தன. வீட்டை சுற்றிலும் இருக்கும் மரங்கள் சாய்ந்து கிடந்தன. இந்த மரங்களை எல்லாம் அகற்ற ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்.

 

மின்சார வாரியத்தை சேர்ந்தவர்கள் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். " அண்ண, எந்த ஊர் நீங்க?", என்று விசாரித்தேன். "திருநெல்வேலி மாவட்டம் நாங்க. பத்து நாளா வேல செய்றோம்", என்றார்கள். புயல் நிவாரணப் பணியில் மிக சிறப்பான பணி, மின் வாரியத் தொழிலாளர்களுடையது. அதை எல்லா இடங்களிலும் காண முடிந்தது.

 

gaja 33 sss



 

உதவிப் பொருட்களை வினியோகிக்க அந்த வட்டத்தின் தி.மு.க செயலாளரும், முன்னாள் கவுன்சிலரும் உதவினார்கள். பெண்கள் வந்து தங்களது ரேஷன் அட்டையை கொடுத்து விட்டு, வரிசையில் நின்றார்கள். சிறு சலசலப்பும் இல்லாமல் பொருட்களை பெற்று சென்றார்கள். இழப்பு மக்களை அந்த அளவிற்கு வாட்டி வதைத்திருக்கிறது.

 

வேதாரண்யம் நகரினுள் சென்றோம். நகர் பகுதியிலும் புயல் பாதிப்பு தெரிந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து, மீண்டும் நடப்பட்டிருந்தன. மின்சார வயர்கள் ஆங்காங்கே அறுந்துத் தொங்கிக் கொண்டிருந்தன. வீடுகளின் மீதும், கடைகள் முன்பும் உபயோகப்படுத்தப் பட்டிருந்த கால்வானிக் ஷீட் கூரைகள் கிழிக்கப்பட்டிருந்தன. நகரம் களை இழந்து, பெரும் சோகத்தில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் சாயல் தெரிந்தது. மக்கள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. 

 

நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்கு நன்றியறிதலாக, முன்னாள் ச.ம.உ காமராஜ் அவர்களின் மகன் ராஜு தேநீர் அளித்தார். அவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது பல செய்திகள் கிடைத்தன.

 

vedaranyam salt



விவசாயிகளைப் போலவே, வேதாரணியம் பகுதியில் உப்பளம் முக்கியமான தொழில், வாழ்வாதாரம். பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலையும், வாழ்க்கையும் அளிக்கும் தொழில். கஜா புயலால் உப்பளத் தொழில் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தொழில் சீராக மாதக் கணக்கில் ஆகும். அதுவரை அந்த உப்பளத் தொழிலாளர்களுக்கு வேலை இருக்காது, வருமானமும் இருக்காது. 

 

வேதாரண்யம் பகுதியில் இருந்து தான் உப்பு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு செல்கிறது. இந்தப் பகுதிக்கு பெரும் வருமானத்தை தரக்கூடிய தொழில் இது. குவித்து வைத்திருந்த உப்பும் நாசமாகி, இன்னும் சில மாதங்களுக்கு தொழில் சீராகாத நிலையில், இந்தப் பகுதியின் முக்கிய வருமானம் தடைபடும். 

 

விவசாயம், உப்பளம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், வேதாரண்யம் பகுதியில் பணப்புழக்கம் இல்லா சூழல் ஏற்படும், பொருளாதாரம் பாதிக்கும்.

 

அடுத்து, கோடியக்கரை கிளம்பினோம்...

(தொடரும்...)


 

sss 333
 

 

 

 


 

 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைப்பகுதியில் ‘விடியல் பயணத் திட்டம்’ தொடக்கம் 

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Dawn Trip begins in hills

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், “அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் மகளிருக்கான 'விடியல் பயணம்’ திட்டம் நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கையில், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் மலைப்பகுதியில் மகளிருக்கான விடியல் பயணத்தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுடன் அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுகவினர், தொ.மு.ச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.

Next Story

“பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Beef can be transported in buses Minister Sivasankar

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வசித்து வரும் பாஞ்சாலை என்ற பெண் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சி பக்கோடா விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். அதோடு அரூருக்கும் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். அதன்படி அண்மையில் வழக்கம்போல் தனது சொந்த ஊரிலிருந்து மாட்டிறைச்சியை எடுத்துக்கொண்டு அரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறி சில கிலோமீட்டர் சென்ற பின் நடத்துநர் ரகு, என்ன எடுத்து வர்றீங்க... என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி எடுத்து வருவதாகப் பாஞ்சாலை பதிலளிக்க, இதெல்லாம் பேருந்தில் எடுத்து வரக்கூடாது என்று கூறி மோப்புப்பட்டி என்ற வனப்பகுதியில் பேருந்தை நிறுத்தி பாஞ்சாலத்தை இறக்கி விட்டுள்ளார். பாஞ்சாலை அடுத்த பேருந்து நிறுத்தத்திலாவது இறக்கி விடுங்கள்; இங்கே இறக்கி விடாதீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத நடத்துநர் ரகு, பாஞ்சாலையை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து பாஞ்சாலை நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்ற அவர், நடந்த சம்பவத்தைத் தனது உறவினர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த பேருந்து திரும்பி அந்த வழியாக வந்த பிறகு வழிமறித்து நியாயம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடுவழியில் இறக்கி விட்டதற்காக ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி பஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Beef can be transported in buses Minister Sivasankar

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளிக்கையில், “அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.  500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.