வ.உ.சி. சிலைக்கு டி.டி.வி. மாலை அணிவித்தார்
நவ-17 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் செந்திலாண்டவன் ஆலயத்தின் பூஜைக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி ஏர்போர்ட் வந்த அ.தி.மு.க.வின் அம்மா அணி டி.டி.வி. தினகரன் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள எஸ்.ஆர்.எம். லாட்ஜில் தங்கினார். சிறிது நேர ஒய்விற்குப் பின்பு இரவு திருசெந்தூர் கிளம்பிச் சென்ற தினகரன், முருகன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இரவு பத்து மணிக்கு மேல் தூத்துக்குடிக்குத் திரும்பினார்.
முன்னதாக தூத்துக்குடி வந்த தினகரனை அவரது கட்சியின் முக்கியப் பொறுப்பாளான ஹென்றி மற்றும் மாணிக்கராஜா தலைமையில் தொண்டர்கள் வரவேற்றனர். மறு நாள் நவ-18 அன்று 11 மணிக்கு மேல் கிளம்பி நெல்லை வந்த தினகரனை மாவட்ட எல்லையான சாரதா கல்லூரியின் முன்பு மா.செ. பாப்புலர் முத்தையா, விஜிலாசத்யானந்த் எம்.பி. மற்றும் கட்சியினர் வரவேற்றார்கள். பின்னர் அவர் வ.உ.சி.யின் மணிமண்டபம் செல்லும் வழியான கே.டி.சி. நகர். மார்க்கெட் ஜங்ஷன் போன்ற இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மதியம் ஒன்றரை மணிவாக்கில் மாநகர கார்ப்பரேசன் அருகில் அமைந்துள்ள வ.உ.சி.மணி மண்டபத்திற்கு வந்த தினகரன் அங்கு செக்கிழுத்த செம்மலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மா.செ. பாப்புலர் முத்தையா எம்.பி. விஜிலசத்யானந்த் மாணிக்கராஜா காவல்ராஜா உள்ளிட்டோர் உடன் வந்தனர். வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த தினகரன், விருதுநகர் மாவட்டம் பேரையூக்குக் கிளம்பிச் சென்றார். மாஜி அமைச்சரான இன்பத்தமிழன் உடன் சென்றார்.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்