Skip to main content

காப்பி பேஸ்ட் கலெக்டர்!  பட்டாசு விவகாரத்தில் பல்டி! -மோடி அரசுக்கு எடப்பாடி அரசு ஜிங்ஜக்!

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
sivakasi protest

 

பசுமைப் பட்டாசு என ஏதேதோ சொல்லி,  உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் நிபந்தனைகளை ஏற்பதெல்லாம், போகாத ஊருக்கு வழி கேட்பதுபோல் இருக்கிறது என்று, கடந்த 21-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களைத் திரட்டி, பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் என்ற பெயரில் சிவகாசியில் முழு கடைப்பு நடத்தி,   விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள் பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்குழுவினர்.  



“காபித்தூள் இல்லாமல் காபி போட முடியுமா? பச்சை உப்பு (பேரியம் நைட்ரேட்) இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியுமா?” என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போன்றவர்களெல்லாம், அந்தப் போராட்டத்தில் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு  ஆதரவாக முழங்கிவிட்டுச் சென்றனர். போராட்டத்தை முன்னெடுத்த தோழர்களும்  “விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்கச் செய்வோம்.” என்று கூறி, போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களைக் கலைந்துபோகச் சொன்னார்கள். 



உச்ச நீதிமன்ற நிபந்தனையால், பட்டாசுத் தொழிலில் பேரியம் நைட்ரேட் தடை செய்யப்பட்ட நிலையில், 60 சதவீத பட்டாசு ரகங்களை உற்பத்தி செய்யமுடியாது என்று பட்டாசு ஆலை அதிபர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். போராட்டம் முடிந்து மூன்று நாட்கள் கடந்தபிறகு, இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம், தொழிலாளர் நலன் கருதி, பட்டாசு ஆலைகளைத் திறக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு அறிவுறுத்தியிருக்கிறார்.  

 

sivakasi protest




அந்த அறிக்கையில், உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பில், சரவெடிகள் தயாரிப்பது,  வேதிப்பொருளான பேரியம் உப்பு பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பது  மட்டும் முற்றிலும் தடை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு நிறுவனம் {PES0),  பேரியம் உப்பு பயன்படுத்தாமல், Rockets,  Amorces Roll caps,  Dot Caps,  Ring Caps,  Atom Bombs,  Chorsa,  Maroons (like Lakshmi, Kuruvi etc.),  Red Sparklers,  Red Color Matches,  Yellow Color Matches,  Red Pellets,  Yellow Pellets ஆகிய பட்டாசுகளைத் தயாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர்.  பேரியம் நைட்ரேட் என்ற மூலப்பொருள் இல்லாமல் தயாரிக்க இயலும் என,  பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு நிறுவனம் {PES0) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததன் அடிப்படையில்,  மேற்கண்ட பட்டாசுகளைத் தயாரித்திடும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் கருதி, உடனடியாக பட்டாசு ஆலைகளைத் திறந்து செயல்படுமாறும்,  உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல்,  இடைக்கால தீர்ப்பின்படி உடனடியாகச் செயல்படுமாறும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் வலியுறுத்தியிருக்கிறார்.  



பட்டாசுத் தொழிலைப் பாதுகாப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பி, சட்ட விதி எண் 3 (3B)-யிலிருந்து பட்டாசுக்குத் தனிப்பட்ட விலக்களிக்கும்படி மத்திய அரசினை வலியுறுத்தவேண்டும் என்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மனு அளித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைகளை,  அப்படியே காப்பி, பேஸ்ட் செய்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டு, இத்தொழிலுக்காகப் போராடிய தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் கொந்தளித்துக் குமுறுகிறார்கள். எங்களின் கோரிக்கை மனுவைக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு, நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஆட்சியர் என்று, அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர். 


பட்டாசு விவகாரத்திலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு  தமிழக அரசு ஜால்ரா போடுவதை,  ஆட்சியரின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. 
 

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
passed away toll rises to 10 in firecracker factory incident

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமி புரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்துவந்த நிலையில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் அங்கு பணியாற்றியதாக கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரில் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும் போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.