Skip to main content

விருதுநகர் எஸ்.பி. அலுவலகத்தில் கொளுத்தப்பட்ட ஆவணங்கள்! -ஜன்னலை உடைத்து தீ வைத்த அக்கிரமச் செயல்!

Published on 30/09/2018 | Edited on 30/09/2018

 

ட்ரிங்.. ட்ரிங்.. 

“அய்யா.. போலீஸ் ஸ்டேஷனா?  எங்க வீட்டுக்குப் பின்னால இருக்கிற  வைக்கப்போர்ல யாரோ தீ வச்சிட்டாங்க.. நீங்கதான்யா யாருன்னு கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுக்கணும்.”

 

“அடப்போய்யா.. எங்க எஸ்.பி. ஆபீஸ்லயே  ஜன்னலை உடைச்சு, டாகுமென்ட்ஸ  தீ வச்சி கொளுத்திட்டாங்க.. அவனையே  இன்னும் எங்களால கண்டுபிடிக்க முடியல.. நீ வேற.. நேரம் காலம் தெரியாம வைக்கப்போர் அதுஇதுன்னு போன் பண்ணிட்டு இருக்க..” 

 

யாரோ, ஏதோ ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து,  இதுபோல பேசி, பதிலுக்கு போலீஸ் தரப்பில் இப்படி ஒரு பதில் சொன்னார்கள் என்பது, கற்பனையாகவும் காமெடியாகவும் இருக்கலாம். ஆனால், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள  மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் இன்று இது சீரியஸாகவே நடந்திருக்கிறது.

 

துப்பாக்கி போலீசார் எப்போதும் நிற்கும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று, அந்த அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னலை உடைத்து, யாரோ வழக்குகள் தொடர்பான முக்கிய ஆவணங்களுக்குத் தீ வைத்துவிட்டார்கள்.  அந்த அறையிலிருந்து புகை வெளியேற, காக்கிகள் உள்ளே சென்று பார்த்தபோது, ஆவணங்கள் பலவும் எரிந்து சாம்பலாகிவிட்டன. பிறகென்ன?  ‘யாருப்பா நம்ம ஆபீஸ் ஜன்னல் கண்ணாடிய உடைச்சது? யாருப்பா தீ வச்சது?’ என்று காக்கிகளிடமே விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

‘உள்ளுக்குள் என்ன புகைச்சல்?’ என்று விசாரித்தபோது, குற்றப்பிரிவு அலுவலகத்தில் முக்கிய அதிகாரி ஒருவர் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வாராம். அவருக்கும் அங்கு பணிபுரிபவர்களுக்கும் ஒரே அக்கப்போராம். அந்த அதிகாரிக்கு அவப்பெயர் வாங்கித் தருவதற்காக, வேண்டாதவர் யாரோ விளையாட்டுக்குத் தீ வைத்து விட்டார் என்கிற ரீதியில் கிசுகிசுத்தார்கள். 

 

பாதுகாப்பு அதிகம் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலேயே,  யாருக்கோ எரிச்சல் மூட்டுவதற்காக, ஆவணங்களைக் கொளுத்தி விளையாடியிருக்கின்றனர்.  காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது; இதயம் கெட்டுவிட்டது என்று  அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருவதை, இச்சம்பவம் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; பிரதமர் நிவாரணம்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
A terrible fire at a firecracker factory in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா நகரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று (06-02-24) திடீரென்று பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. இந்த தீ விபத்தால், ஆலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின. இந்த பயங்கர விபத்தில் பலரும் சிக்கிப் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், பலமணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். இதனையடுத்து, விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்து தொடர்பாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் பலரும் வேதனை அடைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.