திருநள்ளார் சனிபெயர்ச்சியில்
வி.ஐ.பி. பாஸ் குறைப்பு; அமைச்சர் முடிவு
திருநள்ளார் சனிப்பெயர்ச்சி விழாவில் யாருக்கும் விஐபி பாஸ் கிடையாது. அதற்கு மாற்றாக குறைந்த அளவிலான ஸ்பெஷல் பாஸ் மட்டுமே வழங்கப்படும் என வேளாண் அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாரில் வரும் டிசம்பர் மாதம் 19ம் தேதி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி திருவிழா நடைபெற இருக்கிறது. அந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம், புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அதில் எம்எல்ஏ திருமுருகன், கலெக்டர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சனிப்பெயர்ச்சி விழாவிற்காக ரூ.200, ரூ.500 கட்டண டிக்கெட் அச்சடிக்கப்படும். கோயில் உள்ளே வெப்பத்தை போக்க ஏர் கூலர் வசதிகள் செய்து கொடுக்கப்படும். பக்தர்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்பகம், பேருந்து நிறுத்தம் பகுதிகளில் கழிவறை அமைத்துக்கொடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வசதிக்காக 50 பேட்டரி கார்கள், கோயில் நளன் குளத்தை சுற்றி 128 நிரந்தர சிசி டிவி கேமரா மற்றும் போலீசார் பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், அன்னதானம் வசதிகளும் செய்யப்படும்.
அன்னதானத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும். கடந்த முறை நடந்த சனிப்பெயர்ச்சியின் போது 10 ஆயிரம் விஐபி பாஸ் அச்சடிக்கப்பட்டது. போலீசாரின் வேண்டுகோளை ஏற்று இந்தாண்டு சனிப்பெயர்ச்சி விழாவில் விஐபி பாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது. வெறும் 3 ஆயிரம் ஸ்பெஷல் பாஸ் மட்டும் அச்சடிப்பது என முடிவு செய்யப்பட்டது என அமைச்சர் பேசிமுடித்தார். கொடியேற்றப்பட்டு சனிபெயர்ச்சிக்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
க.செல்வகுமார்.