
முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், பார்க்கும் மாப்பிள்ளைகளை வேண்டாம் என்று தட்டிக் கழிக்கும் மகளை பற்றி அம்மா கொடுத்த வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
ஒரு அம்மா தான் கேஸ் கொடுக்க வருகிறார். அவரது வீட்டில், 3 மகள்கள், 1 மகன் இருக்கின்றனர். கணவர் இறந்ததற்குப் பின்னால், 2 மகள்களை திருமணம் செய்து கொடுத்ததாகவும், 35வயதான 3வது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யும் நேரத்தில் பார்க்கும் மாப்பிள்ளைகளை எல்லாம் வேண்டாம் என்று மகள் சொன்னதாகவும் சொன்னார். முதல் மகளுக்கு 34 வயதிலும், இரண்டாவது மகளுக்கு 32 வயதிலும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். 3வது மகள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு பார்க்கும் மாப்பிள்ளைகளை எல்லாம் வேண்டாம் என்கிறாள். அவளைப் பற்றி விசாரித்துக் கூறும்படி சொன்னார்.
நாங்கள் அந்த கேஸை எடுத்துக்கொண்டு, அந்த பெண் வெளியே போகும் போது ஃபாலோவ் செய்ய ஆரம்பித்தோம். அதன்படி, அந்த பெண் வெளியே போகும்போதெல்லாம், ஒரு பையனை சந்தித்துப் பேசி வருகிறாள். இரண்டு பேருக்கும் முதிர்ந்த காதல் என்பதால் சில்மிஷ வேலைகளை செய்யாமல் மெட்சுயூரிட்டியாக நடந்து கொள்கிறார்கள். பையனுடைய சாதி வேறு என்பதால், சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்ணுடைய அம்மாவிடம் இதைப்பற்றி பெண் சொல்ல தயங்கியிருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது.
அதன் பிறகு, அந்த அம்மாவை அழைத்து விஷயத்தைச் சொன்னோம். பெண்ணுக்கு அதிக வயதாகி வருவதால், மகளிடம் இது பற்றி பேசி, அவள் காதலிக்கும் பையனுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறினேன். ஆனால், அந்த அம்மா சம்மதிக்கவே இல்லை. அதன் பிறகு, அந்த அம்மாவிடம் பொறுமையாக அனைத்தையும் எடுத்துக் கூறி அவரை சம்மதிக்க வைத்து அந்த திருமணத்தை நடத்தி வைத்தோம்.