Skip to main content

பள்ளி வளாகத்தில் ஆசிரியரை அரிவாளால் தாக்கிய அண்ணன்; தடுக்க சென்ற மாணவர்கள் காயம்

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

villupuram district school teacher property incident 

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள். இவர்கள் அனைவருக்கும் ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. இதை பங்கு பிரிப்பது சம்பந்தமாக ஆசிரியர் நடராஜனின் மூத்த சகோதரர் ஸ்டாலின் தனது தம்பி நடராஜனை அரிவாளால் தாக்கி உள்ளார். ஆசிரியர் நடராஜன் கோலியனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் தங்கி உள்ளார். சம்பவத்தன்று நடராஜன் மதிய உணவை சாப்பிட்டு விட்டு வருவதற்காக  வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் பள்ளியை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த அவரது மூத்த சகோதரர் ஸ்டாலின் தனது தம்பி நடராஜனை வழிமறித்து சொத்து பிரச்சனை சம்பந்தமாக கேட்டுள்ளார்.

 

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த ஸ்டாலின் தனது தம்பி நடராஜன் முதுகில் வெட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத நடராஜன் அலறி அடித்துக் கொண்டு பள்ளி வளாகத்துக்குள் ஓடி உள்ளார். அவரை துரத்திச் சென்ற ஸ்டாலின் அவரது கையில் மீண்டும் வெட்டியுள்ளார். இதைக் கண்டு பதறிப் போன பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியரை ஒருவர் அரிவாளால் வெட்டுவதை கண்டு திடுக்கிட்டதோடு அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் மாணவர்கள் மனோஜ், ஆகாஷ், முருகன் ஆகியோருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

 

அங்கு இருந்த மாணவர்கள் ஸ்டாலின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி உள்ளனர்.  ஆசிரியர்கள் மூலம் உடனடியாக வளவனூர் காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர்.  இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து நடராஜனை அரிவாளால்  வெட்டிய ஸ்டாலினை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், "தனது தம்பி ஆசிரியர் நடராஜன் தங்களது பூர்வீக சொத்தை எனது தந்தை இறந்த பிறகு பங்கு பிரிக்கும் போது எனக்குரிய பங்கை தரக்கூடாது என கூறியுள்ளார். இவர் ஆசிரியராக கை நிறைய சம்பாதிக்கிறார். விவசாயம் செய்யும் எனக்கு போதிய வருமானம் இல்லை. எனவே எனக்குரிய பங்கை தர மறுப்பது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதற்கு நியாயம் கேட்பதற்காக ஊரில் இருந்து பள்ளிக்கு தேடி வந்தேன். இங்கு  வந்து கேட்ட போதும் அவர் எனக்கு எதிராக பேசினார். அதனால் கோபத்தில் தயாராக வைத்திருந்த அரிவாளால் வெட்டினேன்" என்று கூறியுள்ளார்.

 

இதையடுத்து ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்த வளவனூர் போலீசார் அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். காயமடைந்த ஆசிரிய நடராஜனுக்கும் மாணவர்களுக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்