கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளது இடைச்செருவாய் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் ஊரில் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான, தேசிய விளையாட்டாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள கபடி போட்டியை தொடர்ந்து நடத்தி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளைவழங்கி வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், இவ்வூரில் நடக்கும் கபடி விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வந்து கலந்து கொள்வார்கள். அதன்படி சில நாட்களாக இவ்வூரில் கபடி போட்டி நடந்து வந்தது. இப்போட்டியை அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் கடலூர் பாராளுமன்ற உறுப்பினருமான அருள்மொழிதேவன் துவக்கி வைத்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு மேல் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசை அ.தி.மு.க கிழக்கு ஒன்றியச் செயலாளரும் கூட்டுறவு வங்கித் தலைவருமான வாகை இளங்கோவன் வழங்கினார். இரண்டாவது பரிசை ஊராட்சித் தலைவர் செல்வராஜ் வழங்க, மூன்றாவது பரிசு விஜயகாந்த் என்பவரும் நான்காவது பரிசை சிவக்குமாரும் வழங்கி சிறப்பித்தனர்.
போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கான சுழல் கோப்பையை, பொதிகை மினரல் வாட்டர் கம்பெனி உரிமையாளர் பொதிகை செந்தில் வழங்கினார். விளையாட்டு வீரர்களுக்கு சீருடை, தங்குமிடம், உணவு ஆகியவற்றை சந்தோஷ் குமார் ஆகிய இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கிராம மக்களின் ஆதரவோடு கபடி விளையாட்டுப் போட்டி இவ்வாண்டு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளது.