
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமு - ராதா (38) தம்பதியினர். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவரின் விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக வந்து அவரது வீட்டிலேயே வாடகைக்கு தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் இரவு (08.06.2024) கணவன் ராமு மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியுள்ளது, தன்னை அவமானப்படுத்தி மனைவி பேசியதால் ஆத்திரமடைந்த கணவன் ராமு பக்கத்தில் இருந்த உருட்டு கட்டையால் தனது மனைவி ராதாவை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். அலறலோடு கீழே விழுந்த ராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ராதாவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வந்து பார்க்கும்போது ராதா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
அவர்களை கண்டதும் ராமு அங்கிருந்து தப்பியோடி உள்ளார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மனைவியை கொன்ற ராமு அரசு பேருந்தில் லத்தேரி வழியாக தப்பி செல்வது தெரியவந்தது. துரிதமாக செயல்பட்ட போலீசார் அவரை எல்.ஜி.புதூரில் மடக்கி பிடித்து கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.