Skip to main content

'இனியும் மோடி, அமித்ஷாவின் மாயாஜாலத்திற்கு இறையாக மாட்டார்கள்'-திருமாவளவன் பேச்சு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
vck Thirumavalavan speech

ஜனவரி 26 வெல்லும் ஜனநாயகம் என்ற மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''இந்த மாநாட்டில் முதல்வர் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். தேசிய அளவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இடதுசாரிகள் கட்சித் தலைவர்கள் சீதாராம் எச்சூரி, ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேருரை ஆற்ற உள்ளனர்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார முதல் புள்ளியாக இது அமையும் என நம்புகிறேன். வெல்லும் ஜனநாயகம் என்றால் வெல்லும் இந்தியா கூட்டணி என பொருள். அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அறைகூவல் விடுகிறோம்.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான நாடாளுமன்ற தேர்தல் அல்ல. இது இறுதி யுத்தம். ஜனநாயகத்தை, அரசியலமைப்பை, நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு. இறுதி போராகவே இதனை கருதுகிறது விசிக. இந்த இறுதி போரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். பாரதிய ஜனதாவை ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறியும். அதற்கான ஒரு அச்சாரமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயக மாநாடு நடைபெறும்.

பில்கிஸ் பானு வழக்கில் மேல்முறையீட்டு தீர்ப்பு வெளியாகி இருப்பது மிகுந்த ஆறுதலை தருகிறது. பாதிக்கப்பட்ட அம்மையாரின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது. குஜராத் உயர் நீதிமன்றத்தால் அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அரசியல் அமைப்புச் சட்டத்தை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து மோசடி செய்திருக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்கள் எத்தகைய கொடூரத்தையும் செய்துவிட்டு தப்பிவிட முடியும் என பில்கிஸ் பானு தீர்ப்பின் போது கருதப்பட்டது. ஆனால் அவர்கள் தப்ப முடியாது மீண்டும் சிறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்றைக்கு அளித்துள்ள தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் நமக்கான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். பில்கிஸ் பானு குடும்பத்தினரை கொடுமையான வன்முறைக்கு உள்ளாக்கி குற்றச் செயலில் ஈடுபட்ட 11 பேரும் தண்டிக்கப்பட வேண்டும் விரைவில் சிறை படுத்தப்பட வேண்டும்.

மோடி, அமித்ஷா போன்றவர்களின் மாய மாளவித்தைகளுக்கு மக்கள் இனி மயங்க மாட்டார்கள், ஏமாற மாட்டார்கள். பத்தாண்டு காலம் நரக வேதனையை அனுபவித்திருக்கிறார்கள். பிஜேபியால் வஞ்சிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் தான். ஆக இனியும் மோடி, அமித்ஷா போன்றவர்களின் மாயாஜால வித்தைகளுக்கு இறையாக மாட்டார்கள் என நம்புகிறோம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் இவிஎம் முறையை பயன்படுத்த கூடாது. ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். ஓட்டுச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் சங்பரிவார அமைப்புகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இனி எந்த காலத்திலும் அவர்கள் தேர்தல் களத்தில் அடி எடுத்து வைக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள்.

அதனால்தான் அண்மையில் விசிக சார்பில் வேண்டாம் இ.வி.எம் வேண்டாம் மீண்டும் வாக்குச்சீட்டு முறை என்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இது இந்தியா முழுமைக்கும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டிய கோரிக்கை. ஆகவே இதை இந்தியா கூட்டணி பெருமளவில் மக்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கும். 

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களை தொழிற்சங்க தலைவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கனிவாக கேட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகை நாள் என்பதால் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பாஜக தரப்பினர் மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதுகின்ற உதிரி கட்சிகள் தொடர்ந்து இந்திய கூட்டணி குறித்த கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இது இந்தியா கூட்டணி மீது அவர்களுக்கு உள்ள அச்சத்தை காட்டுகிறது. இந்தியக் கூட்டணியில் சிறு சிறு முரண்பாடுகள் உள்ளது தான். பல மாநில கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய கூட்டணியில் முரண்பாடுகள் இருப்பதை தவிர்க்க முடியாது. எந்த வகையிலும் இந்தியா கூட்டணியில் கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும். பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியும். இதிலிருந்து திமுகவோ அதன் கூட்டணி கட்சிகளோ வெளியேற வாய்ப்பே இல்லை. இந்திய கூட்டணி தமிழகத்திலும் கூட்டம் நடத்த கட்டாயம் வாய்ப்பு உண்டு. 

விசிக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பதை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவிக்கப்படும்' என்றார்.

சார்ந்த செய்திகள்