Skip to main content

500 மரக்கன்றுகளுக்கு சைக்கிளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி வளர்க்கும் இளைஞர்!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

 

tree water youth service in pudukkottai district

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்பட பல மாவட்டங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதைக் கலையாகவும், கலாச்சாரமாகவும் கொண்டுள்ளனர் இளைஞர்களும், விவசாயிகளும்.

 

இப்படி வளர்க்கப்பட்ட கோடிக்கணக்கான மரங்கள் கஜா புயலில் சில மணி நேரத்தில் வேரோடு சாய்ந்து தரையோடு கிடந்தது. இதைப் பார்த்து சில நாட்கள் கண்ணீர் வடித்தாலும் அடுத்த நிமிடமே இதே போன்று பல மடங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு கிடைத்த இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கின்றனர். பேராவூரணி உள்பட பல இடங்களில் நீர்நிலைகளுக்கு மத்தியில் குருங்காடுகளையும் அமைத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கைஃபா, திருவாரூரில் கிரீன் நீடா, புதுக்கோட்டையில் மரம் அறக்கட்டளை, கொத்தமங்கலம், மறமடக்கி இளைஞர் மன்றங்கள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் பல இயக்கங்கள் அமைப்புகள் மூலம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. 

tree water youth service in pudukkottai district

மற்றொரு பக்கம் தஞ்சை மாவட்டம், பேராவூரணி தொகுதியில் உள்ள நாடியம் கடற்கரையில் சுமார் 18 ஏக்கரில் சீமை கருவேல மரங்களை அழித்துவிட்டு கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் நினைவாக அவர்களின் பெயரில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணிகளை கைஃபா அமைப்பினர் முன்னெடுக்க, முதல் கன்றை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நட்டு தொடங்கி வைத்துள்ளார்.

 

ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் பொது இடத்தில் தனி ஒருவர் சுமார் 1000 மரக்கன்றுகள் நட்டு தினசரி தண்ணீர் தூக்கி ஊற்றி சுமார் 500 கன்றுகளை மரங்களாக வளர்த்திருக்கிறார். 

tree water youth service in pudukkottai district

அந்த இளைஞரை சந்தித்த போது, "நான் ரமேஷ்.. கஜா புயலுக்கு முன்பு நின்ற மரங்கள் சாய்ந்த போது பல நாள் வருத்தமாக இருந்தேன். அதன் பிறகு முடிவெடுத்து பசுமை புரட்சி என்ற பெயரோடு கொத்தமங்கலம் அய்யனார் கோயில் வளாகத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய பரப்பளவுள்ள குளத்தைத் தேர்வு செய்து எந்த இயற்கை சீற்றத்தாலும் சாய்க்க முடியாதபடி ஆழமாக குழி வெட்டி மரக்கன்றுகளை நடத் தொடங்கினேன்.

 

அப்துல் கலாம் முதல் தேசிய, மாநில தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் உள்ளூரில் நடக்கும் திருமணங்கள், பிறந்த நாள்களை கொண்டாடுவோரை மரக்கன்று வைக்கச் சொல்லி வலியுறுத்தி அவர்கள் நடும் கன்றுகளையும் நானே தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறேன். பலர் கிண்டல் செய்வார்கள், சிலர் கன்றுகளை பிடிங்கி வீசுவார்கள், ஆடுமாடுகள் கன்றுகளை தின்றுவிடும். அத்தனையும் தாங்கிக் கொண்டு சொந்த செலவிலேயே கூண்டு அமைத்து குளத்தில் தண்ணீர் எடுத்து சைக்கிளில் கொண்டு போய் ஒரு நாளைக்கு 200 குடம் தண்ணீர் ஊற்றுவேன். சுழற்சி முறையில் தண்ணீர் ஊற்றி குழந்தைகளைப் போல பாதுகாப்பேன். குளத்தில் தண்ணீர் இல்லை என்றால் விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து சைக்கிளில் குடங்களைக் கட்டிக் கொண்டு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி 1000 கன்றுகளில் 500 மரங்களை உருவாக்கிவிட்டேன்.

tree water youth service in pudukkottai district

இப்போது நம்மிடமிருந்து அழிந்துவரும் பலவகையான மரக்கன்றுகளை தேடிப் போய் வாங்கி வந்து நடுகிறேன். எல்லாமே என் செலவு தான். பல நேரம் குளத்தில் தண்ணீர் இல்லாத போது ஒரு நாளைக்கு 3 டேங்கர் வீதம் வாரத்திற்கு ஒரு முறை பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி கன்றுகளுக்கு ஊற்றுவேன். ஒரு டேங்கர் ரூ 700 விலை கொடுத்து வாங்கி வந்தேன்.

 

ஜூன் 3- ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர்  பிறந்த நாளுக்கு மரக்கன்று நட்டோம். அதன் பிறகு தகவல் தெரிந்து வந்த சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் மரக்கன்றுகள் மரமாக வளர்ந்து நிற்பதைப் பார்த்து பாராட்டியதோடு என்ன உதவி வேண்டும் என்று கேட்டார். மரக்கன்றுகளுக்கு ஊற்ற தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறேன். அதனால் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்துக் கொடுத்தால் போதும் என்று கேட்டேன். உடனே ஆழ்குழாய் கிணறு அமைத்துக் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆழ்குழாய் கிணறு கிடைத்துவிட்டால் இங்கு சுமார் 75 ஏக்கரில் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சில வருடங்களில் குருங்காட்டை உருவாக்கிவிடுவேன்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.