![Transfer of Senthilbalaji to Kaveri Hospital](http://image.nakkheeran.in/cdn/farfuture/BjJEKY6As7YtVntYz3h4q-RJX_1v5EcJMauta6CJ6YI/1686847326/sites/default/files/inline-images/21_73.jpg)
கடந்த 8 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட முறையீட்டு வழக்கு தொடர்பாக நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த வழக்கில், 28ம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றக்கோரும் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம், மாற்றலாம் என அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து அவரை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்குதான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பினர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றலாம் என நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி உத்தரவு பிறப்பித்து அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.