Skip to main content

குரூப் - 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன டி.என்.பி.எஸ்.சி.!

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
tNPSC gave good news to Group - 4 candidates

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த மாணவர்கள் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். அதே சமயம் இந்த தேர்வின் முடிவு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் வெளியிடப்பட்டும் என டி.என்.பி.எஸ்.சி. சார்பில்  ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான்  குருப் - 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது.

tNPSC gave good news to Group - 4 candidates

இந்நிலையில் நடந்து முடிந்துள்ள குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. இன்று (11.09.2024) அறிவித்துள்ளது. ஏற்கனவே 6224 காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில் டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 224லிருந்து, 6 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் போட்டித் தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே சமயம் இந்த காலியிடங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால் கட் ஆஃப் மதிப்பெண்கள் சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்