Skip to main content

இந்து முன்னணி கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு!- திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவு!

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர், நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னேற்ற கழகத் தலைவர் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், இந்து கோட்பாடுகளுடன் அரசியல் கட்சியாக செயல்பட்டு வரும் இந்து முன்னணி திருப்பூர் முழுவதும் தங்கள் கட்சியின் கொடிக்கம்பங்களை அமைத்துள்ளனர். 

tiruppur corporation commissioner chennai high court


விதிமுறைகளுக்கு முரணாகவும், சட்ட விரோதமாகவும் நடைபாதைகளில் இந்தக் கொடிக்கம்பங்களை நட்டுள்ளனர். பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் திருப்பூர் முழுவதும் 500- க்கும் மேற்பட்ட கொடிக் கம்பங்களை எந்த அனுமதியும் பெறாமல் இந்து முன்னணியினர் வைத்துள்ளனர். இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், உத்தரவிற்கு முரணாக திருப்பூரில் இந்து முன்னணியினர் கொடிக்கம்பங்களை வைத்துள்ளனர். இந்தக் கொடிக்கம்பங்களை அகற்றக்கோரி கடந்த ஜூன் 12-ல் மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, திருப்பூரில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி கொடிக்கம்பங்களை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

tiruppur corporation commissioner chennai high court


வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, திருப்பூரில் சட்டவிரோதமாக எவ்வளவு கொடிக்கம்பங்கள் உள்ளன? எவ்வளவு அகற்றப்பட்டுள்ளது? என்பது குறித்த முழு விவர அறிக்கையுடன் பிப்ரவரி 10- ஆம் தேதியன்று திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.




 

சார்ந்த செய்திகள்