
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இருந்து கோவில்பட்டிக்கு நேற்று காலை அரசு பேருந்து ஒன்று தச்சநல்லூர் பைபாஸ் சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு கார் வந்ததுள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று பேருந்தும் காரும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. காரை ஓட்டி வந்த தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த நீர்காத்தலிங்கம் (வயது 39) என்பவர் காரின் உட்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி மாதம் மது போதையில் காரை ஓட்டிச் சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி விசாரித்த நீதிபதி நீர்காத்தலிங்கத்தை குறுக்குத்துறை பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை இரவு 12 மணிக்கு மேல் தினமும் 1 மாதம் வரை சுத்தம் செய்ய வேண்டும் என்று நூதன தண்டனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கினார்.
இதையடுத்து ஜாமீனில் வந்தவர் நள்ளிரவு நேரத்தில் டாஸ்மாக் கடையை சுத்தம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை நீர்காத்தலிங்கம் வண்ணார்பேட்டை செல்வதற்காக காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. மதுக்கடையை சுத்தம் செய்ய சென்றவர் பேருந்து மோதி பலியான சம்பவம் திருநெல்வேலியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.