Skip to main content

தவறவிட்ட நகையைக் கண்டெடுத்துக் கொடுத்த பூக்காரப் பெண்!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

lady Florist finds lost jewelry

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வேலாங்குளம். இந்த ஊரைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி 36 வயதான ராஜகுமாரி. அவருக்கு சொந்தமான 5 பவுன் நகையை தங்களது குடும்பச் செலவிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் திருக்கோவிலூர் நகரிலுள்ள ஒரு அடகுக் கடையில் அடமானம் வைத்திருந்தார் ராஜகுமாரி.

 

தற்போது, விவசாய அறுவடை முடிந்து, மகசூல் விற்பனை செய்த பணத்தில், தான் அடமானம் வைத்த நகையை மீட்டுச் செல்வதற்காக நேற்று திருக்கோவிலூர் சென்றுள்ளார். தான் அடமானம் வைத்த நகைக்கடையில் பணத்தைக் கொடுத்துவிட்டு தனது 5 பவுன் நகையை வாங்கி கையில் வைத்திருந்த பர்ஸில் வைத்துள்ளார். அதை ஒரு ஒயர்கூடையில் வைத்து எடுத்துக் கொண்டு ஊருக்குச் செல்வதற்காக கடைவீதி வழியே பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

 

பஸ்டாண்டு வந்ததும் வைத்திருந்த ஒயர்கூடையில் ஐந்து சவரன் நகையைக் காணவில்லை. நகை, வரும் வழியில் தவறி விழுந்துவிட்டதாக எண்ணி பதறிப் போனார் ராஜகுமாரி. பின்னர், உடனே அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று, வரும் வழியில் தான் அடகுக் கடையில் மீட்டுக்கொண்டு வந்த நகையைக் காணவில்லை என்று கூறியுள்ளார். போலீசார் அவர் அடகுக் கடையில் இருந்து வந்த வழியே நகையைத் தேடிச் சென்றனர். அந்த வீதியில் அக்கம்பக்கத்தில் கடை வைத்திருந்தவர்கள் மற்றும் எதிரே நடந்து வந்தவர்கள் எனப் பலரிடமும் விசாரித்தபடியே சென்றனர். அப்போது அந்த வீதியில் ஒரு இடத்தில் பூக்கடை வைத்திருந்த 39 வயது சசிகலா என்பவர், போலீசார் விசாரித்ததைப் பார்த்ததும் வீதியில் கிடந்த பர்ஸை எடுத்து வைத்திருந்ததை உடனே அவர் போலீசாரிடம் கொடுத்து, 'இதுதானா என்று பாருங்கள்!' எனக் கொடுத்துள்ளார்.

 

அதில், ராஜகுமாரியின் 5 பவுன் நகை பத்திரமாக இருந்தது. அப்போது பூக்கடை சசிகலா போலீசாரிடம், "இந்த பர்ஸ் என் கடை அருகே கீழே விழுந்து கிடந்தது. அதை தற்செயலாகப் பார்த்த நான் எடுத்தேன். அதில், நகை இருந்தது. அது யாருடையது என்பது குறித்து அந்த பர்ஸில் எந்த விவரமும் இல்லை. சரி தவறவிட்டவர்கள் தேடிவந்து கேட்டால் கொடுத்துவிடலாம் என்று எடுத்து வைத்திருந்தேன். நீங்கள் அதை தேடி வந்ததும் அதைக் கொடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார். அவரின் நேர்மையைக் கண்டு வியந்துபோன போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர் கையாலேயே நகையைத் தவறவிட்ட ராஜகுமாரியின் கையில் ஒப்படைக்கச் செய்தனர். பூக்கடை சசிகலாவின் நேர்மையை அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்களும் மனம் மகிழ்ந்து பாராட்டினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.