
தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழையானது பொழிந்து வருகிறது.
கடலூரில் மீண்டும் பல இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிஞ்சி நகர், முல்லை நகர், குண்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பல இடங்களில் மழை நீர் வடியாத நிலையில் நாளையும் (03/12/2024) கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். ஆனால் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், பள்ளி விடுமுறை குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் எனவும் புதுவை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (03/12/2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போச்சம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை (03/12/2024) விடுமுறை அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புயல் பாதிப்பு காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு டிசம்பர் 10ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.