
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தியவர்கள் 3 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாடு அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தமிழ்நாடு அரசும் கடத்தலைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று மதுரையிலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து சுமார் 88 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், காவல்துறை விசாரணை செய்ததில் பரமேஸ்வரன் என்பவருக்கு கார்த்திக் ஓட்டுநராக இருப்பதும், அவர் கொடுக்கும் கஞ்சாவை பல்வேறு பகுதிகளில் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து பரமேஸ்வரனை பிடித்த காவல்துறையினர் அவரிடம் இருந்தும் 72 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரித்ததில், பரமேஸ்வரன் அண்டை மாநிலங்களில் திருடிய கார்களை வைத்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அவர் திருடிய கார்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சா விற்பனை மூலம் கிடைத்த 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 12 செல்போன்களையும் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், இன்று காலை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை ராயபுரம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாகப்பட்டிணத்தை சேர்ந்த ஈஸ்வர பிரசாத், தெலங்கானாவை சேர்ந்த வேங்கடபதி, வாரங்கல் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் இந்த கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய வழக்கு போல் இந்த காரும் திருடப்பட்ட காரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.