Skip to main content

ஆசியாவில் உயரமான குதிரை சிலைக்கு ஆயிரக்கணக்கில் குவியும் காகித பூ மாலைகள்!!

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலை கொண்ட குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமத் திருவிழாவில் குதிரை சிலைக்கு 35 அடி உயரத்தில் காகிதப் பூ மாலைகள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ளது பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில். கோயிலின் முன்னால் 33 அடி உயரத்தில் வானில் தாவிச் செல்லும் தோற்றத்துடன் ஒரு குதிரை சிலையும் எதிரே ஒரு யானை சிலையும் அமைக்கப்பட்டிருந்தது. வில்லுனி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது யானை சிலை உடைந்து போனது. ஆனால் குதிரை சிலை அப்படியே 100 ஆண்டுகளை கடந்தும் நிற்கிறது. சுண்ணாம்பு பயன்படுத்தி கட்டப்பட்ட குதிரை சிலை அதிக வலுவுள்ள சிலை.

 

 Thousands of pieces of paper flower garlands to the statue of the high horse in Asia

 

சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் தலைமையில் கிராமத்தார்களின் துணையுடன் பலரது உதவியுடன் கோயில் சீரமைப்பு பணிகள் நடந்த போது குதிரை சிலையை சீரமைக்க உடைக்க முடியாத அளவில் வலுவாக இருந்ததால் அப்படியே மராமத்து செய்யப்பட்டு கம்பீரமாக நிற்கிறது 33 அடி குதிரை சிலை. 

 

இந்த குதிரை சிலையுடன் கூடி பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருவிழா மாசிமகத்தில் 2 நாட்கள் மட்டும் நடக்கிறது. இந்த திருவிழாவின் சிறப்பே 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலைக்கு 35 அடி உயரத்தில் காகிதப் பூ மாலைகளை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்வது தான். லாரி, வேன், போன்ற வாகனங்களில் மாலைகளை ஏற்றி வந்து குதிரை சிலைக்கு அணிவித்து வழிபட்டு செல்கிறார்கள் பக்தர்கள். 

 

இந்த மாலைகள் 3 மாதங்களுக்கு முன்பிலிருந்தே தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிடுகிறது.இன்று மாசிமகத்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை முதலே குதிரை சிலைக்கு மாலைகள் குவியத் தொடங்கியது. ஆயிரக்கணக்கில் மாலைகள் குவிந்தது. அத்தனையும் காகிதப் பூ மாலைகள். இந்த மாலைகளை அணிவிக்க வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இன்றும் மாலைகள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு இடங்களில் அன்னதானம். மாலைகள் அணிவிப்பதை காண புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். 

 

 Thousands of pieces of paper flower garlands to the statue of the high horse in Asia

 

பக்தர்களின் வசதிக்காக அறந்தாங்கி, பேராவூரணி, புதுக்கோட்டை, கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், திருச்சிற்றம்பலம் என பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. பால்குடம், காவடி, கரும்பு தொட்டில் என பல்வேறு நேர்த்திக்கடன்களும் செய்கிறார்கள். 

 

 

ஒரு பக்தர் கூறும் போது.. இந்த கோயில் திருவிழாவின் சிறப்பே ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பது தான். வழக்கமாக பளபளக்கும் மாலைகள் அணிவிக்கப்படும். இந்த ஆண்டு எளிதில் மக்கும் காகித பூ மாலைகளையே பக்தர்கள் அணிவிக்கின்றனர். ஒரு மாலை ரூ. 3 முதல் 10 ஆயிரம் வரை ஆகிறது. சுமார் 2 ஆயிரம் மாலைகள் வரை குதிரை சிலைக்கு அணிவிக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் இந்த நாளில் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்து நிலையத்தில் உள்ள சிலைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
court order to remove idols from bus stand

பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக்கோரி தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி  ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜெயலலிதாவின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று (13.03.2024) விசாரணைககு வந்தது.  அப்போது, “வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

1,200 ஆண்டுகள் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
1,200-year-old Tirumal, Vaishnavite sculptures discovered in virudunagar

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகில் அம்மாபட்டி ஊராட்சி, களத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ள திருமால், வைஷ்ணவி, லிங்கம், நந்தி, காளி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களத்தூர் அர்ச்சுனா ஆற்றின் கரையில், பழமையான திருமால் சிற்பம் இருப்பதாக அம்மாபட்டி வீரையா கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது, “திருமால், மாயோன் என தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி என பிற இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறார். இங்கு பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், நான்கு கைகளுடன், கர்த்தரி முக முத்திரையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்து, கிரீட மகுடத்துடனும், காதுகளில் மகர குண்டலங்களுடனும் திருமால் காட்சியளிக்கிறார். முகம் தேய்ந்துள்ளது. சக்கரம் பக்கவாட்டில் திரும்பி பிரயோகச் சக்கரமாக உள்ளது. இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது மார்பில் ஸ்ரீவத்ஸமும், கிரீடமகுடத்தின் பின்பக்கம் சிரச்சக்கரமும் உள்ளன. கைகளின் மேற்பகுதியின் நடுவில் தோள்வளை அணிந்துள்ளார். சிற்பம் 109 செ.மீ உயரமுள்ளது.

இதன் அருகில் 82 செ.மீ உயரமும், 46 செ.மீ அகலமும் உள்ள பலகைக் கல்லில் திருமாலின் பெண் சக்தியான வைஷ்ணவியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. சப்தகன்னியரில் ஒருவரான இவர், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்திருக்கிறார். சிற்பம் சேதமடைந்துள்ளது. இதன் வடக்கில் நந்தியும், ஆவுடை இல்லாத லிங்கமும் உள்ளன. இங்கிருந்து 300மீ தூரத்தில் 2½ அடி உயரமுள்ள எட்டுக்கை காளி சிற்பம் உள்ளது. திருமால் கையிலுள்ள பிரயோகச் சக்கர அமைப்பு மூலம், இச்சிற்பங்கள் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். அக்காலகட்டத்தில் இவ்வூரில் அருகருகே சிவன், திருமால், காளி கோயில்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. கி.பி.9-ம் நூற்றாண்டு வரை வைணவக் கோயில்களில் சப்தமாதர் வழிபாடு இருந்துள்ளது. 

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

அருகிலுள்ள மேட்டில் பெரிய கருங்கற்கள் உள்ளன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கல்திட்டையின் கற்களாக இருக்கலாம். இதில் இருந்த கற்களை எடுத்து லிங்கத்தைச் சுற்றி வைத்துள்ளனர். மேலும் நுண்கற்காலக் கருவி, செங்கற்கள், சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கசடுகள், சுடுமண் ஓடுகள் போன்றவையும் அங்கு சிதறிக் கிடக்கின்றன. ஒரு செங்கலின் அளவு, நீளம் 33 செ.மீ, அகலம் 16.5 செ.மீ, உயரம் 7 செ.மீ. ஆகும். இதன் மூலம் இவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் காலத்தில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடியிருப்பும் இருந்துள்ளது எனலாம்.  

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

இவ்வூருக்கு அருகிலுள்ள நத்தம்பட்டி, மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் ராஜேந்திர சோழன் மடை குறிப்பிடப்படுகிறது. நத்தம்பட்டியில் 8-ம் நூற்றாண்டு திருமால் சிற்பம் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகருகே உள்ள இம்மூன்று ஊர்களிலும் இரும்புக் காலத்திலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் மக்கள் வாழ்ந்துள்ளனர். இவ்வூர்கள் சேரநாட்டிலிருந்து மதுரை செல்லும் வணிகப் பெருவழியில் உள்ளன. எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.