![vvv](http://image.nakkheeran.in/cdn/farfuture/VAfc6rv9DG9dzW_sYkXyRChNCpc6VG93iDgSebPyCCk/1588905922/sites/default/files/inline-images/611_6.jpg)
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பாலாஜி நகர் பொதுமக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
அதில், திருவெண்ணெய்நல்லூர் பாலாஜி நகரில் அரசு மதுபானக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே இந்தக் கடையால் பெண்கள், குழந்தைகள் மக்கள் மிகுந்த இன்னல்களைச் சந்தித்து வந்தனர். இந்தக் கடைக்கு குடிப் பிரியர்கள் வருவதற்கு வயல்வெளி சாலை உள்ளிட்ட ஐந்து சாலைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் மக்கள் வசிக்கக்கூடிய இந்தச் சாலையைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் இந்த வழியாகக் குடிப்பிரியர்கள் செல்வதைத் தடுக்க காவலர்களை ஈடுபடுத்த வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் மக்கள் நடமாட்டம் உள்ள பாதையான மணக்குள விநாயகர் மருத்துவமனை கிருபாபுரீஸ்வரர் தார் சாலையை ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி நடந்து செல்வதற்கு வழி இல்லாமல் செய்துவிட்டனர்.
இதனால் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் எவரும் நடந்து கூடச் செல்ல முடியாத அளவிலும் பள்ளத்தில் விழுந்து விபரீதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கரானாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்தப் பகுதியில் இரண்டு காவலர்களைப் பணியில் அமர்த்த வேண்டும். குடிப் பிரியர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத வயல்வெளி சாலை வழியாக வருவதற்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.