Skip to main content

ஊரடங்கிலும் பசித்தோருக்கு உணவு... அசத்தும் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம்!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

Thiruvaroor araneri lions club

 

திருவாரூர் அருகே கரோனா துவங்கிய நாளில் இருந்து பசித்தோருக்கு உணவளித்து மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கத்தினர்.

 

கரோனா வைரஸால் வேலையின்றி பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே அள்ளாடிவரும் நிலையில், ஆதரவற்றோர்களும், வயது முதிர்ந்த பெரியவர்களும் என்ன செய்வார்கள் என்கிற மனித நேயத்தில், "பசித்தோருக்கு உணவளிப்போம்" என்கிற முனைப்போடு கடந்த ஒரு மாதகாலமாக அவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று உணவளித்து பசியாற்றிவருகிறது, திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம். திருவாரூரில் செயல்பட்டுவரும் அறநெறி லயன்ஸ் சங்கத்தினர் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நற்பணிகளில் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். 

 

ஒரு ஆண்டுக்கு முன்பு கிராமப்புற பள்ளி மாணவர்களை, நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலோடு நடிகர் சூர்யா உள்ளிட்ட சமுகத்தின் மீது அக்கறைக்கொண்ட நடிகர்கள், கல்வியாளர்கள் துணை கொண்டு நூலகங்கள் போன்ற பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அறிவார்ந்த மாணவர்களாக உருவாக்கினர். இது பலதரப்பட்டவர்களாலும் பாராட்டப்பட்டது.

 

அதன்பிறகு ரத்ததானம், உடல்தானம், கண்தானம் என செய்தபடியே இருந்தவர்கள், கரோனா பொதுமுடக்கத்தால் முடங்கிக்கிடந்த ஏழ்மையானவர்களுக்கு வீடு தேடிச் சென்று உணவுப் பொருட்களை வழங்கினர், இன்றளவும் வழங்கிவருகின்றனர்.

 

Thiruvaroor araneri lions club

 

இதற்கிடையில் பொதுமுடக்க நாட்களில் பணியில் இருந்துவந்த துப்புறவு தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட உதவிகள் செய்ததோடு, அவர்களுக்கும் காவல்துறையினருக்கும், மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் முப்பது நாட்களுக்கு மேல் தர்பூசனி, பாயாசம், அவுள், பிஸ்கட், இளநீர், உணவு என தினசரி அவரவர்கள் பணியில் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினர்.

 

இதற்காக திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் உள்ளிட்டோர் அறநெறி லயன்ஸ் சங்க உறுப்பினர்களை அழைத்துப் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினர்.

 

Thiruvaroor araneri lions club

 

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ஆதரவற்று இருக்கும் முதியோர்களுக்கு தினசரி உணவு வழங்கி அவர்களின் பசியையும் போக்கிவருகின்றனர். இது குறித்து திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகளுல் ஒருவரான ராஜ்குமாரிடம் கேட்டோம், "எங்கள் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம் மக்களுக்கு சேவகம் செய்வதைப் பெருமையாகக் கருதுகிறோம், பொதுமுடக்கத்தால் மருத்துவ வசதியில்லாதவர்களுக்கு உதவி வருகிறோம், பசித்தோருக்கு உணவு வழங்குகிறோம், இதை எங்கள் தலைவர்கள், உறுப்பினர்கள் என அனைவருமே பாகுபாடு இல்லாமல் செய்துவருகின்றனர். இது எங்களுக்குப் பெரும் மனநிறைவைக் கொடுக்கிறது," என்கிறார் உற்சாகமாக.

 

Thiruvaroor araneri lions club

 

எல்லோரிடமும் பணம் இருக்கும், ஆனால் அதை அடுத்தவர்களின் பசியைப் போக்க உதவுமா என்றால் மலை அளவிலான கேள்வியே நிற்கும். ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடி உதவும் அறநெறி லயன்ஸ் சங்கம் மேலும் வளரும் என்கிறார்கள் திருவாரூர் மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்