Skip to main content

ஆட்சியர் மோதல் - மக்களுக்கான விழாவில் கோலோச்சும் அதிகாரிகள் 

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
t

 

தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா. இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா கடந்த 14-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவந்து கொண்டிருக்கிறது. இன்று ( 20.11.18 ) மகாரதம் தேரோட்டத்தை முன்னிட்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்துள்ளனர். தேர்கள் மாடவீதியில் பவனி வருகின்றன. 

 

வரும் 23 ஆம் தேதி விடியற்காலை நான்கு மணிக்கு அண்ணாமலையார் கோவிலுக்குள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2660 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை கோயிலுக்குள் இருந்தபடி காண ஒவ்வொரு பக்தரும் விரும்புவர். இதற்காக கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக ஒவ்வொரு கலரில் அனுமதி அட்டை வழங்கப்பட்டு வந்தது. இதில் ஏகப்பட்ட ஊழலும், குளறுபடியும் நடந்ததால் அதில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கோயிலுக்குள் இருந்து சாமி தரிசனம் செய்தவற்கு முதல் உரிமைதாரர்கள் காலம் காலமாக கோயிலுக்காக பல பணிகள் செய்து வரும் கட்டளைதாரர் மற்றும் உபயதாரர்கள் முக்கியமானவர்கள். அதற்கடுத்து அரசு கெஜட்படி அரசு உயர் அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தியது. 

 

அதன்படி அனுமதி அட்டைகள் இந்து சமய அறநிலையத்துறையின் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்தன. அதிலும் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் பெயரில் கோயில் நிர்வாகம்மே பாஸ்களை அச்சடித்து தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியது, கோயில் பணியாளர்கள் பலர் அதை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வெளியே விற்பனையும் செய்தனர். இதுவும் சர்ச்சையானது. இந்நிலையில் பாஸ் வழங்குவதில் இந்த ஆண்டு ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியரே பாஸ்களை வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பாஸ்களை வழங்குகிறார் என்கிறார்கள் கோயில் அதிகாரிகள். அதில் மோதலும் ஏற்பட்டுள்ளது.

 

இதுப்பற்றி நம்மிடம் பேசிய கோயில் ஊழியர் ஒருவர், அடையாள அட்டையை நானே பிரித்து வழங்குகிறேன் என மொத்தமாக அவர் வாங்கிக்கொண்டார். அதன்படி கோயில் நிர்வாகத்துக்கு என 100 பாஸ்களை மட்டும்மே வழங்கினார். இதனால் அதிர்ச்சியான கோயில் இணை ஆணையர், துறை ஆணையரிடம் பேசினார். அவர் கலெக்டரிடம் பேச, அதன்பின் கூடுதல் பாஸ்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறைக்கும் இவ்வளவு அடையாள அட்டை தான் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தருகிறார் என்றார்.

 

இப்போது இதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பக்தர்களிடம். இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்து அமைப்பின் பிரமுகர் ஒருவர், தீபத்திருவிழா என்பது கடந்த 10 வருடங்களாக மெல்ல மெல்ல அரசு அதிகாரிகளுக்கான விழாவாக மாறிவருகிறது. கார்த்திகை தீப கொடியேற்றத்துக்கும் கோயிலுக்குள் பாதுகாப்பு என்கிற பெயரில் பக்தர்களை அனுமதிப்பதில்லை, தீபத்தன்று மகா மோசம். திரும்பிய பக்கம்மெல்லாம் போலிஸ்சும், அதிகாரிகள் அவர்களது குடும்பத்தார் தான் இருப்பார்கள். பக்தர்கள் என்பவர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு வருபவர்கள் மட்டும்மே. ஏழை பக்தர்கள் என்பவர்கள் கண்ணில் வௌக்கெண்ணெய் விட்டு தேட வேண்டி வருகிறது.

 

இந்நிலையில் பாஸ் வழங்குவதையும் மாவட்ட ஆட்சியரே எடுத்துக்கொண்டார் என்கிற தகவல் மூலம் குளறுபடி குறையும், பாஸ்ஸை வைத்து சம்பாதிப்பது குறையும் என்பது சந்தோஷமே. ஆனால், அந்த பாஸ்கள் அனைத்தும் தற்போது அதிகாரிகளுக்கு மட்டும் தான் போகும் என நினைக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. 

 

தீபம் தரிசனம் காணவரும் அதிகாரிகளுக்காகவே, மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சி என அனைத்து துறைகளும் இணைந்து ஹோட்டல்கள், லாட்ஜ்களில் பாதி ரூம்களை இலவசமாக வாங்கிவிடுகின்றன. ஒவ்வொரு ஹோட்டலும் பாதுகாப்புக்கு வரும் காவலர்கள், நகராட்சி ஊழியர்கள் என அனைவருக்கும் இலவசமாக 3 வேலையும் சாப்பாடு வாங்கிவிடுகிறார்கள். 

 

தீபத்தை காணவரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் குடும்பத்தை அவர்கள் தங்கவைக்கப்பட்ட ஹோட்டலில் இருந்து கோயில் கருவறை வரை பாதுகாப்பாக அழைத்து வர ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் போலிஸ், நூற்றுக்கும் அதிகமான கார்கள், ஜீப்களை பயன்படுத்துகிறார்கள். அப்படி வருபவர்கள் 6 மணிக்கு மகாதீபம் ஏற்றி முடித்ததும் 10 நிமிடத்தில் கோயிலை விட்டு வெளியேறிவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அதன்படியே நடக்கிறது, அவர்களுக்காகவே போலிசும் வேலை செய்கிறது. பக்தர்கள் பாதுகாப்பு பற்றி அவர்கள் துளியும் கவலைப்படுவதில்லை. இதற்காகவே பல கூட்டங்களை நடத்துகிறது மாவட்ட நிர்வாகம். 

 

தீபத்திருவிழா என்பது கட்டளைதாரர்கள், பக்தர்கள் இணைந்து நடத்துவது. கோயில் நிர்வாகத்தின் பணி, அதை ஒழுங்குப்படுத்துவது மட்டுமே. இதற்கான செலவு கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பக்தர்களே 60 முதல் 70 சதவிதம் வரை ஏற்றுக்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு சாமி தரிசனம் செய்வதில் முன்னுரிமையில்லை. அதிகார தோரணையில் வந்து சாமி தரிசனம் செய்பவர்களுக்கு கடந்த காலத்தை விட இனி அதிக முக்கியத்துவம் கிடைக்கபோகிறது. அதிகாரிகள் தங்களுக்கான விழாவாக தீபத்திருவிழாவை முற்றிலும் மாற்றிவிட்டார்கள் என்பது தற்போதைய நடைமுறைகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. 

 

மக்கள் கட்டும் வரியில் மக்களுக்கு எதிராக அரசாங்கங்கள் செயல்படுவதை போல மக்களுக்கான விழாவில் அதிகாரிகள் கோலோச்சுகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.