Skip to main content

’அது பாஜகவின் மோசடி குணத்துக்கு சான்றாக இருக்கிறது’ - திருமாவளவன்

Published on 02/02/2019 | Edited on 02/02/2019
t

 

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து:
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களை ஏமாற்றும் மோசடி பட்ஜெட் ஆகும். பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக எப்படி மக்களை ஏமாற்றி வந்ததோ அதன் தொடர்ச்சியாக இந்த பட்ஜெட்டிலும் பல பொய்களை பாஜக அரசு அறிவிப்புகளாக வெளியிட்டுள்ளது. 

 

பட்ஜெட்டின் முக்கியமான மூன்று அறிவிப்புகளாக வருமான வரி வரம்பை உயர்த்துவது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்குதல், சிறு குறு விவசாயிகளுக்கு உதவி அளித்தல் ஆகியவை கூறப்படுகின்றன. அவை மூன்றுமே மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டவையாக உள்ளன. 

 

வருமான வரி வரம்பை ஆண்டுக்கு 5 லட்சமாக உயர்த்திவிட்டதாக பாஜக காரர்கள் கூறுகிறார்கள். ஆனால் வரி விதிப்பதற்கான ‘சிலாப்’ மாற்றப்படவில்லை. ஏற்கனவே ஆண்டுக்கு 3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை என இருந்தது. இப்போது அது 5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்குமேல் வருமானம் உள்ளவர்கள் ஏற்கனவே இருந்த  சிலாபின்படிதான் வரி கட்டியாக வேண்டும். எனவே இந்த அறிவிப்பால் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களே பயன்பெறுவார்கள்.

 

சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ஏக்கருக்கு 4,000 என்று ஆண்டுக்கு 8000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்தத் திட்டத்தை பார்த்து நகல் செய்துதான் இப்போது அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது . இந்த 6 ஆயிரமும் மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. கணக்கிட்டுப் பார்த்தால் 100 நாள் வேலை செய்பவருக்கு கிடைக்கும் தொகை அளவுக்குகூட இது இல்லை.

 

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பென்ஷன் மிகப்பெரிய மோசடியாகும். 29 வயதுக்கு மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொண்டு மாதம் 100 ரூபாய் கட்ட வேண்டுமாம். அவர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் தருவார்களாம். 

 

இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பதிவு செய்துகொண்டு மாதம் 100 ரூபாய் செலுத்தினால் மத்திய அரசுக்கு மாதம்தோறும் ஆயிரக்கணக்கான  கோடி ரூபாய் வருமானம் வரும். அரசு கொடுக்கப்போகும் பென்ஷனைவிட இது அதிகமாகும்.  10 கோடி பேர் இந்த பென்ஷன் திட்டத்தால் பயன் அடைவார்கள் என்று கூறியுள்ளனர். இந்த பட்ஜெட்டில் இந்தப் பென்ஷன் திட்டத்துக்காக வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.   அதைக்கொண்டு ஒரு ஆண்டுக்கு எத்தனை லட்சம் பேருக்கு பென்ஷன் தரமுடியும் ? 

சுமார் 30 வருட காலம் மாதம் தோறும் 100 ரூபாய் செலுத்தி அதன்பிறகு அவருக்கு பென்ஷன் கிடைக்கும் என்று சொல்வது மிகப்பெரிய மோசடி அல்லாமல் வேறொன்றுமில்லை.

 

தங்களால் நிறைவேற்ற முடியாத பட்ஜெட்டிலும் கூட விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பையும் மோடி அரசு வெளியிடவில்லை. இந்தியா முழுவதும் சுமார் 24 கோடி பேர் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை முற்றிலுமாக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கி வைத்துவிட்டனர்.

மோடி அரசின் ஆயுட்காலம் இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில் இடைக்கால பட்ஜெட் என சொல்லி தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டியதை எல்லாம் அதில் கூறியிருக்கிறார்கள். அப்படி சொல்லும்போது கூட நேர்மையாக எதையும் சொல்லவில்லை. 
அது பாஜகவின் மோசடி குணத்துக்கு சான்றாக இருக்கிறது.

 

அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்கிற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிவிப்பால் நிலைகுலைந்து போய் இருக்கும் மோடி அரசு மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு மோசடி பட்ஜெட்டை அறிவித்துள்ளது. இதை இந்திய மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. ஐந்தாண்டு காலமாக தங்களை ஏமாற்றிய பாஜக அரசுக்கு தேர்தலில்  தக்க பாடம் புகட்டுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.