தென்காசியில் மறைந்த மத்திய அமைச்சர் அருணாசலத்தின் உதவியாளராக இருந்தவர் முகமதலி ஜின்னா. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பிலும் இருந்து வருகிறார். மறைந்த அருணாசலம் அமைச்சராக இருந்தபோது தென்காசி வட்டாரத்தில் அவருக்கு எல்லாமாக இருந்தவர் இவர்தான்.

தென்காசியில் தற்போது ஹார்டுவேர்ஸ் வணிகம் செய்து வருகிறார் முகமது அலி ஜின்னா. இவரது வீடு தென்காசியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள சக்தி நகர் பகுதியில் அமைந்துள்ளது.நேற்று இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை ஜின்னா குடும்பத்தினர் வீடு திரும்பியதும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.வீட்டினுள் சென்றுக் பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 லட்ச ரூபாய் பணம் மற்றும் 50 சவரன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

தென்காசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரல்ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தென்காசியில் சில மாதங்களாக ஓய்ந்திருந்த திருடர்களின் நடமாட்டம் மீண்டும் தலைதூக்கி இருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.