Skip to main content

கணவன் இறந்தது மனைவிக்குத் தெரியாமல் அடக்கம்... கரோனா கொடுமை!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

tenkasi district communixt party of india leader incident coronavirus

 

தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் சமீபமாக உள்ள நெட்டூரைச் சேர்ந்தவர் ராஜாங்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கிணைந்த நெல்லை தென்காசி மாவட்டத்தின் பீடித் தொழிலாளர்களின் சம்மேளத்தின் மூத்த தலைவர். விபரம் தெரிந்த காலம்தொட்டே தன்னை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட ராஜாங்கம், கட்சி மட்டத்தில் பல பதவிகளை வகித்தவர், தன் போராட்டக்குணம் காரணமாக லட்சக்கணக்கான பீடித் தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்திருக்கிறார்.

 

வயது மூப்புகாரணமாக, நெல்லையை விட்டுத் தனது சொந்தக் கிராமமான நெட்டூரில் வசித்த ராஜாங்கம் உடல்நலக் குறைவு காரணமாக பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பின்பு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு கரோனா சோதனை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. சிகிச்சையின் போதே மருத்துவமனையிலேயே இயற்கை எய்தினார் ராஜாங்கம்.

 

அதேசமயம் ராஜாங்கத்தின் மனைவியாரைத் தொற்று பரவக்கூடும் என்பதால் அவரை நோய்த் தனிமைப்படுத்தல் முகாமில் ஐந்து நாட்கள் தங்கவைத்து கணவரின் மரணச் செய்தியைக் கூட அதிகாரிகள் அவருக்குத் தெரியப்படுத்தாமல் செய்துவிட்டனர்.

 

தனது வாழ்நாள் முழுக்க மரணம் வரை கடைக்கோடிக் கூலித் தொழிலாளர்களுக்காகவும், பீடித் தொழிலாளர்களுக்கும் போராடி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்த மக்கள் அபிமானி ராஜாங்கம். பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட அவரின் மரணச் செய்தியைக் கூட அவரது துணைவியாருக்குத் தெரியப்படுத்தாமலிருந்ததைக் கண்டனம் செய்த எம்.ஜி.ஆர். மக்கள் கட்சியின் நிறுவனரான ரவிக்குமார், இனிமேலும் இது போன்ற நிகழ்வுகள் வேறு நபர்களுக்கு நடக்காமலிருக்க வேண்டும் என்று தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

 

மரணமடைந்தவரின் முகத்தை உறவினர்கள் கூட பார்க்க முடியாத கொடுமை மட்டுமல்ல, அவர்களின் மத வழக்கப்படியான ஈமக்கிரியைகளைக் கூடச் செய்யவிடாமல் அந்த ஆன்மாவை அலைபாய வைத்திருக்கிறது கொடூரக் கரோனா.

 

 

சார்ந்த செய்திகள்