Published on 20/12/2019 | Edited on 20/12/2019
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. மேலும் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று (19.12.2019) வெளியானது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக முதல்முறையாக பறக்கும் படையை மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

அதன்படி 2 அல்லது 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மூன்று பறக்கும் படை வீதம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மை பொறுப்பு அலுவலர், காவல்துறையினரைக் கொண்ட பறக்கும் படை கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ள வரை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை கண்காணிக்கும் என்றும் கூறியுள்ளது.