Skip to main content

இடைத்தேர்தல் ஆதரவு! பாஜக நிபந்தனை: பணிந்தார் எடப்பாடி!!- பரபரப்பு பின்னணி.

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவை போராடிப் பெற்றிருக்கிறது அதிமுக !  இந்த ஆதரவைப் பெறுவதற்காக சில பேரங்களுக்குப் பணிந்துள்ளது அதிமுக தலைமை! 
 

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பாஜக. இதற்காக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, 'இடைத்தேர்தல் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படாது. அதில் முழுமையாக அதிமுக மட்டுமே போட்டியிடும் ' என நிபந்தனை விதித்தார் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி. இதனையே அதிமுக தலைவர்கள் கூட்டணி கட்சிகளிடம் வலியுறுத்தினர். இதனை தோழமைக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டனர். இடைத்தேர்தல் நடந்த 22 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிட்டது. 
 

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காலியான நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், அதிமுகவுக்கு தனது ஆதரவை பாஜக தெரிவிக்கவில்லை. பாஜகவின் ஆதரவைக் கேட்டு அதிமுக தரப்பிலிருந்து மூத்த அமைச்சர்கள் பகீரத முயற்சி எடுத்தனர். ஆனால், ஆதரவை தெரிவிக்காமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்த பாஜக தலைமை தற்போது அதிமுகவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

tamilnadu assembly by election bjp support with admk party


இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், " இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் பாஜகவினர் மிகத் தீவிரமாக செயல்படுவர் " என்றிருக்கிறார். அதிமுகவை பாஜக ஆதரித்திருக்கும் பின்னணி குறித்து விசாரித்தபோது, " இடைத்தேர்தல் நடக்கும்  2 தொகுதிகளில் ஒரு தொகுதியை பாஜக கேட்டது. குறிப்பாக, நாங்குநேரியில் பாஜக போட்டியிட விரும்பி ஓபிஎஸ் மூலம் எடப்பாடிக்கு அழுத்தம் தரப்பட்டது. ஆனா, முந்தைய நிபந்தனைகளைச் சுட்டிக்காட்டி தொகுதியை ஒதுக்க மறுத்ததுடன் அவசரம் அவசரமாக வேட்பாளாரை அறிவித்தார் எடப்பாடி. இதில் பாஜக தலைமை அதிர்ப்தியடைந்தது. 


அதனாலேயே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஆர்வம் காட்டவில்லை பாஜக. மேலும், தொகுதி ஒதுக்காததில் அமித்சா கோபமாக இருப்பதாகவும் அதிமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில்தான் மூத்த அமைச்சர்கள் இருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார் எடப்பாடி. அவர்களோ, மத்திய அமைச்சரும் தமிழகத்தில் அதிமுக அரசியலை கவனிப்பவருமான பியூஸ்கோயலிடம் விவாதித்தார்கள். அப்போது, ' உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும். எல்லாம் நல்லபடியாக நடக்கும். இந்த இடைத்தேர்தலில் அதிமுகவை பாஜக ஆதரிக்க வேண்டும் ' என கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, மேலிடத்திடம் விவாதித்துவிட்டு, 'உள்ளாட்சி தேர்தலில் சென்னை உட்பட 5 மாநகராட்சி மேயர் பதவி பாஜகவுக்கு வேண்டும். மற்ற நிலைகளில் 35 சதவீத இடங்கள் தேவை. இதற்கு ஒப்புக்கொண்டால் கூட்டணி தொடரும். இல்லேன்னா, உறவை முறித்துக்கொள்ளலாம் ' என தெரிவித்திருக்கிறார் பியூஸ்கோயல். 


இதனைத் தொடர்ந்து, பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் நிறைய விவாதங்கள் நடந்தன. கடைசியில், 5 மேயர் இடங்களை விட்டுக்கொடுப்பதாக அதிமுக தலைமை ஒப்புக்கொண்டது. இதனையடுத்தே இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு தனது ஆதரவை பாஜக தெரிவித்தது. இடைத்தேர்தலில் ஆதரவைப் பெற , பாஜகவின் நிபந்தனைகளுக்குப் பணிந்துள்ளார் முதல்வர் எடப்பாடி " என பின்னணிகளை விவரிக்கின்றனர் பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.