
திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணி துணைமின் நிலையத்திற்கான கூடுதல் கட்டடம் மற்றும் மின்மாற்றிகளை இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
"தமிழகத்தில், தற்போது மின் உற்பத்தி 17,682 மெகாவாட்டாக இருக்கிறது. தேவையைவிட இது 25% கூடுதல் மின்சாரம் என்பதால் விவசாயப் பணி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையில் இருப்பதுதான் என்பதால் தமிழக விவசாயிகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் கிடையாது.
ஒப்பந்தப் பண்ணைகள், சந்தைப்படுத்துதல், அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்தல், ஒரு பகுதியில் விளையக்கூடிய விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனைக்கு கொண்டு செல்வது என்பன போன்ற தமிழகத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் இருப்பதுதான், தற்போது மசோதாவாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மசோதாவால் எந்தவிதப் பாதிப்பும் தமிழகத்திற்கு ஏற்படாது. எனினும், இதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அரசுகள் பேசி, இதில் முடிவு எடுத்துக் கொள்ளும் அதிகாரமும் மசோதாவில் வழங்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை" என்கிறார் அமைச்சர் காமராஜ்.